துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் தம்பதியின் சடலங்கள்

நுவரெலியா – டொப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்ததை அடுத்து, கணவரினால் மனைவி சூட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர். இந்த சம்பவத்தில் 26 வயதான யுவதி ஒருவரும், 28 வயதான இளைஞன் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தியே இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.