இறந்த பின்பும் தேசத்தின் குரலின் ஆக்கங்களைக் கண்டு அஞ்சும் சிங்களம் - அன்ரன் பாலசிங்கம் இணையம் மீது தாக்குதல்!

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஆக்கங்களை ஆவணப்படுத்தியிருக்கும் www.antonbalasingham.com இணையத்தளம் மீது சிங்களக் கைக்கூலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாலா அண்ணையின் பதினான்காவது ஆண்டு நினைவு நாளாகிய 14.12.2020 திங்கட்கிழமை மாலை 6:00 மணிக்கு www.antonbalasingham.com இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இது நடந்த சில மணிநேரங்களில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் சிங்கள அமைச்சர் ஜீ.எல்.பீரிசின் உதவியாளராக விளங்கியவரான அசாங்க வெலிக்கல என்பவரால் இவ் இணையத்தளத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் ருவிட்டரில் (Twitter) கருத்து வெளியிடப்பட்டிருந்தது.
இந் நிலையில் www.antonbalasingham.com இணையத்தளம் மீது 15.12.2020 செவ்வாய்க்கிழமை பிரித்தானிய நேரம் மாலை 3:00 மணியளவில் சிங்களக் கைக்கூலிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
இதனால் 5 மணிநேரத்திற்கு மேலாக இணையத்தளம் செயலிழந்திருந்தது.
எனினும் இணையத்தளத்தின் தொழில்நுட்பப் பிரிவினர் எடுத்த முயற்சியின் விளைவாக தாக்குதல் முறியடிக்கப்பட்டு மீண்டும் இரவு 9:00 மணிக்குப் பின்னர் www.antonbalasingham.com இணையத்தளம் இயங்கத் தொடங்கியுள்ளது.
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் உயிரோடு இருந்த பொழுது அவரது ஆளுமைக்கு அஞ்சிய சிங்களம், அவர் இறந்த பின்னரும் அவரது ஆக்கங்களின் வீச்சிற்கு அஞ்சுவது அவர் விட்டுச் சென்ற ஆக்கங்களின் கனதியை உணர்த்துகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.