தமிழ் மக்களுக்கு நீதி கேட்டு பிரித்தானிய நாடாளுமன்றில் குரெலெழுப்பிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரத் தொமஸ்!

இறுதிப் போரில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் உள்ளடங்கலான கொடூர மனித உரிமை மீறல்களுக்கு நீதி கேட்டு பிரித்தானிய நாடாளுமன்றில் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரத் தொமஸ் (Gareth Thomas) அவர்கள் குரலெழுப்பியுள்ளார்.
கடந்த 03.10.2019 அன்று பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்ற பொது விவாதம் ஒன்றின் பொழுது தமிழ் மக்களின் விவகாரத்தை மையப்படுத்தி உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கரத் தொமஸ், ‘2009ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் உள்ளடங்கலான கொடூர மனித உரிமை மீறல்களின் விடயத்தில் தமிழ் மக்களுக்கு நீதிகிட்டுவதற்கு எவ்விதமான நடவடிக்கைகளைப் பிரித்தானிய அரசாங்கம் எடுக்கப் போகின்றது?’ என்று கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானிய நாடாளுமன்றின் பொதுச்சபை முதல்வருமான ஜேக்கொப் றீஸ்-மொக் (Jacob Rees-Mogg) அவர்கள் பதிலளிக்கையில், தமிழ் மக்களின் விடயத்தில் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் கரிசனை செலுத்து வருவதாகவும், இது விடயத்தில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.