அரசாங்கத்தின் கடன் திருப்பிச் செலுத்தல் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் எந்தவித தொழில்நுட்பத் தவறுகளும் ஏற்படவில்லை என ஊடகத்துறை பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) இடம்பெற்ற திறைசேரியினால் வெளிநாடொன்றுக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் நிதி காணாமல் போன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணைய மோசடி தொழில்நுட்பத் தவறாகும். அது நிதி நிர்வாகத் தவறுகளால் ஏற்பட்டதாக எதிர்க்கட்சியினர் சபையில் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கிறோம்.
குறித்த தொகை கடன் திருப்பிச் செலுத்தத் தவறியதன் விளைவாக ஏற்பட்டதல்ல. மாறாக, இணையம் மூலமான மோசடி என அரசாங்கம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
அத்துடன் இந்த 2.5 மில்லியன் அமெரிக்கன் டொலர் இணைய மோசடி தொடர்பாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்ட அமுலாக்க அமைப்புகள் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இத்தகைய இணைய மோசடிகள் மீண்டும் இடம் பெறாமல் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, இலங்கை கணினி அவசர நடவடிக்கை குழுவுடன் இணைந்து, ஆய்வகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதுடன் அதன் மூலம் 250க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்பு துறைகளின் இணையப் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும். மேற்படி மோசடி சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் பொது கடன் முகாமைத்துவ அலுவலகம் விரிவான நிர்வாக மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னர் ஒரே அதிகாரி தனிப்பட்ட முறையில் வெளிநாட்டு கடன் செலுத்தல்களுக்கு அனுமதி வழங்கிய நடைமுறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தனித்தனி பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சிரேஷ்ட அதிகாரிகளின் சுயாதீனமான பரிசீலனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடன் வழங்குநர்களின் வங்கிக் கணக்கு விபரங்கள் மாற்றம் செய்யப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல்வேறு வழிகளின் ஊடாக கட்டாய ஒப்புநோக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
அரசின் கடன் திருப்பிச் செலுத்தலில் தொழில்நுட்பப் தவறுகளும் ஏற்படவில்லை – கௌசல்யா ஆரியரத்ன
Ad Space
Ad Space
Ad Space
Ad Space