சிங்கப்பூரில் வாழும் இந்தியச் சமூகத்தினரை இலக்கு வைத்து, நாட்டின் பல்லினக் கலாச்சார மாதிரியை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட 14 சர்ச்சைக்குரிய பதிவுகளை உடனடியாக முடக்குமாறு யூடியூப், பேஸ்புக் மற்றும் எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குச் சிங்கப்பூர் அரசாங்கம் சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இணையக் குற்றவியல் பாதிப்புகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், சிங்கப்பூர் பொலிஸாரினால் இந்த அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்நாட்டு அமைச்சு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் உள்நாட்டு அமைச்சின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி,
கடந்த மே மாதம் முதல் சிங்கப்பூரின் கலாச்சார அடையாளம் மற்றும் இன அரசியல் குறித்து சீன மொழி இணையத்தளங்களில் சில காணொளிகள் உலா வரத் தொடங்கியுள்ளன. அதனைத் தொடர்ந்து, "சிங்கப்பூர் தற்போது இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது" என்றவாறான தீவிர இனவாத மற்றும் தூண்டல் நாடகங்களைக் கொண்ட பதிவுகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளன.
இந்த சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தும் அநேகமாக சீனாவை தளமாகக் கொண்ட சமூக வலைத்தள பக்கங்களில் இருந்தே உலகளாவிய ரீதியில் பரப்பப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்டுள்ள சனத் தொகை புள்ளிவிபரங்களின்படி, அந்நாட்டின் ஒட்டுமொத்த சனத்தொகை மற்றும் இன ரீதியான பரம்பலில் சீன வம்சாவளியினர் 75 சதவீதமானவர்களும், மலாய் வம்சாவளியினர் 15 சதவீதமானவர்களும், இந்திய வம்சாவளியினர் 7% – 9% சதவீதமானவர்களும் உள்ளனர்.
சிங்கப்பூரில் வசிக்கும் ஒட்டுமொத்த 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையில், இந்திய வம்சாவளியினர் வெறும் 7 முதல் 9 சதவீத சிறுபான்மையினராகவே வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த விவகாரம் குறித்துச் சிங்கப்பூரின் சட்ட அமைச்சரும், உள்நாட்டு துறைக்கான இரண்டாவது அமைச்சருமான எட்வின் டோங் (Edwin Tong) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
"இந்தக் காணொளிகள் எங்களின் பல்லின சமூகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். அவர்கள் நிறம் மற்றும் இனத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்க முயல்கிறார்கள். ஆனால் இது சிங்கப்பூரின் அடையாளம் அல்ல. சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு சமூகமும் சமமாக மதிக்கப்படுகின்றது. எங்களின் சமூக ஒற்றுமையைக் குலைக்கும் இத்தகைய பதிவுகளை, குறிப்பாக வெளிநாட்டவர்கள் பரப்புவதை அரசாங்கம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது," என அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், இது எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்தாலும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பிரச்சாரம் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனவும், வெளிநாட்டு நெட்டிசன்களால் இது தன்னிச்சையாக உருவாக்கப்பட்டுள்ளது எனவம் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எவ்வாறாயினும், தீவிர தேசியவாதம் மற்றும் அந்நியர் மீதான வெறுப்புப் பிரச்சாரங்களை சிங்கப்பூர் கடுமையாக எதிர்ப்பதாக உள்நாட்டு அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியர்களுக்கு எதிராக பரப்பப்பட்ட 14 பதிவுகளை முடக்க முகநூல், எக்ஸ் தளங்களுக்கு சிங்கப்பூர் உத்தரவு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space