கொக்கைன் போதைப்பொருளை தனது உடலில் மறைத்துக்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணி ஒருவர், இன்று ஞாயிற்றுக்கிழமை (12) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உகண்டா நாட்டைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் வர்த்தகர் ஆவார்.
இவர் உகண்டாவின் கம்பாலா நகரில் இருந்து புறப்பட்டு, கட்டாரின் தோஹா நகரை வந்தடைந்து, அங்கிருந்து கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கியு.ஆர் - 664 என்ற விமானம் ஊடாக இன்றையதினம் காலை 09.30 மணிக்கு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 01 கோடியே 23 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா என சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட விரிவான சோதனையின் போது, அவர் தனது உடலில் 21 மாத்திரைகளாக மறைத்து வைத்திருந்த 274 கிராம் கொக்கைன் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
இது தவிர, குறித்த பெண் மேலும் ஒரு தொகுதி கொக்கைன் போதைப்பொருளை உருண்டைகளாகத் தயார் செய்து விழுங்கியிருக்கலாம் என சுங்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த உகாண்டா நாட்டுப் பெண் மேலதிக மருத்துவ சிகிச்சை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
உடலில் மறைத்து கொக்கைன் கடத்தல்: வெளிநாட்டுப் பெண் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space