தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வாக சமஸ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பு மற்றும் உண்மையான அதிகாரப் பங்கீடு அவசியம் என இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினிடம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வலியுறுத்தினார்.
அண்மையில் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை தனிப்பட்ட முறையில் சந்தித்து சாணக்கியன் கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த சந்திப்பின்போது, இலங்கையில் தமிழர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகள் குறித்த விடயங்களை சாணக்கியன் முன்வைத்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, நில அபகரிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்பு இல்லாமை போன்ற விடயங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் தொடர்வதாகவும் அவ்வேளை சுட்டிக்காட்டினார்.
மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் வேலைவாய்ப்பு, பற்றாக்குறை, முதலீட்டு இல்லாமை மற்றும் போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு முழுமையடையாத நிலை ஆகியவை அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வாக சமஸ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பு மற்றும் உண்மையான அதிகாரப் பங்கீடு அவசியம் என்றும் சாணக்கியன் கனடா உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தினார்.
கனடா போன்ற நாடுகள் பல இன, மொழி மற்றும் பண்பாட்டு பல்வகைமையைக் கொண்ட சமூகங்களில் சமஷ்டி ஆட்சிமுறையின் மூலம் அதிகாரப் பங்கீட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த அனுபவங்கள் இலங்கைக்கு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக இருக்க முடியும் என்பதையும் சாணக்கியன் இதன்போது உயர்ஸ்தானிகரிடம் குறிப்பிட்டார்.
எனவே, இலங்கையில் நிலையான அரசியல் தீர்வினை எட்டுவதற்காக நீதி, பொறுப்பேற்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பங்கீடு ஆகியவை ஒன்றிணைந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை அவ்வேளை வலியுறுத்தினார்.
உண்மையான அதிகாரப் பங்கீடு அவசியம் - கனடா உயர்ஸ்தானிகரிடம் சாணக்கியன் வலியுறுத்து
Ad Space
Ad Space
Ad Space
Ad Space