நாடாளுமன்றத்துக்குள் தற்போதைய எதிர்க்கட்சி போதியளவு பலமாகச் செயல்படாததால் அதற்கு வெளியே மக்கள் சக்தியைத் திரட்டவுள்ளோம். இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் தகுந்த வியூகங்களுடன் தற்போதைய அரசியல் களம் மாற்றியமைக்கப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
03ஆம் திகதி புதன்கிழமை கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடாளுமன்றத்துக்குள் தற்போதைய எதிர்க்கட்சி போதியளவு பலமாகச் செயல்படவில்லை. இதனால்தான் பாராளுமன்றத்துக்கு வெளியேயும் எதிர்க்கட்சியைப் பலப்படுத்த வேண்டும் எனத் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். பாராளுமன்றத்துக்கு வெளியே மக்கள் சக்தியைத் திரட்டும் பணிகளைத் நாம் முன்னெடுக்கவுள்ளோம்.
அடுத்து நாடாளுமன்றத்துக்கும் மாகாணசபைகளுக்கும் யார் வர வேண்டும் என்பதை மக்கள் நன்கு அறிவர். அதனைத் தீர்மானிக்கும் உரிமையை மக்களிடமே விட்டுவிட வேண்டும். மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அரசாங்கம் பாராளுமன்றத்தில் வெவ்வேறு சட்டமூலங்களை முன்வைத்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றது.
மாகாணசபை என்பது மக்களின் ஜனநாயக உரிமையாகும். தற்போதைய ஆளுங்கட்சியினர் அன்று எதிர்க்கட்சியில் இருந்தபோது, ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில்லை என்று தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டினர். இன்று அவர்கள் வழங்கிய ஜனநாயக வாக்குறுதிகளை நிறைவேற்றி உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டால், நான் மத்திய மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராகக் களம் இறங்கி நிச்சயம் வெற்றிபெற்றுக் காட்டுவேன். எதிர்க்கட்சி சிதறிப்போயுள்ளதாகக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தகுந்த வியூகங்களுடன் களம் இறங்கத் தயாராகி வருகின்றோம். இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் பொறுத்திருந்து பார்த்தால் இந்த அரசியல் களம் எவ்வாறு மாறுகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதற்கான சரியான தளத்தை அமைக்கும் பணிகளில் தற்போதைய எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன என்றார்.
ஓரிரு மாதங்களில் தகுந்த வியூகங்களுடன் அரசியல் களம் மாற்றியமைக்கப்படும் !
Ad Space
Ad Space
Ad Space
Ad Space