“கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள்” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பாளையங்கோட்டை கேடிசி நகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் விஜய் பேசியதாவது: திமுக கையில் முழு அதிகாரம் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது.
ஏதாவது முட்டுக்கட்டை போட்டு நிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்திருப்பார்கள். தற்போது அதிகாரமில்லாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். இதனால் இங்கு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்த முடிந்துள்ளது. திமுக அரசு நமக்கு எதிராக பிரச்சினைகள், அவதூறுகள் பரப்பினார்கள்.
திமுக, பாஜக கூட்டணி வெளியே தனித்தனியாக இருப்பாங்க. ஆனால், இரண்டு பேரும் ஒன்றுதான். இருவரின் நோக்கமும் ஒன்றுதான். விஜய் வந்துவிடக்கூடாது என்பதுதான் அவர்களது நோக்கமே. நான் வந்ததால் ஊழல் செய்ய முடியாதபடி செய்துவிடுவேன் என்பதால் என்மீது அவர்களுக்கு கடும் ஆத்திரம்.
அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை மக்கள் உருவாக்கிவிட்டனர். அவர்களின் கூட்டணி கணக்கு எடுபடவில்லை. அவர்களின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்துப் போய் நிற்கிறது. அதை ஒட்டவைத்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணி கட்சியினரே ஒருத்தருக்கு ஒருத்தர் ஓட்டுப் போடமாட்டாங்க போலிருக்கிறது. திமுக-வின் நேரடி கூட்டணிக்கும், மறைமுக கூட்டணிக்கும் நம்மீது கடும் ஆத்திரம்.
அவங்க குடும்பத்திலேயே விசில் சத்தம்பலமாக கேட்கிறதாம். அதனால் இன்னும் ஆத்திரம். சில பல கோடிகளைக் கொடுத்து தனது பையில் காங்கிரஸை ஸ்டாலின் சார் போட்டுக்கொண்டார். ஆனால், உண்மையான காங்கிரஸார் நம்மிடம் உள்ளனர். அவர்களது சிறுபான்மை பாசம் என்ற சாயம் வெளுத்துப் போய்விட்டது.
நான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் போனதுக்குப் பின்னரே கட்சியை ஆரம்பித்துள்ளேன். இது அரசியலை தாண்டிய உறவு. அரசியல் ஆதாயம் தேடுவோருக்கு இது புரியாது. மற்றவர்களுக்கு இது எலெக் ஷன். எனக்கு ஒரு எமோஷன். எனக்கு ஒன்று என்றாலும், மக்களுக்கு ஒன்று என்றாலும் மக்களுக்கும் எனக்கும் கண் கலங்கும். கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள். இதனால் ஜனநாயகனை முடக்கினர். அதை யார் முடக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதுவும் எடுபடவில்லை.
நான் வெளியே வரக்கூடாது என்று கண்டிஷன் போட்டனர். அதுவும் எடுபடவில்லை. பின்னர், நம்மை சுற்றியிருக்கிறவர்களை வைத்து அவதூறு பரப்பினர். அதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. எத்தனை சோதனைகள், வேதனைகளை கடந்து வந்துள்ளேன். திமுக-வினராலேயோ, பாஜக-வினராலேயோ மற்றும் பலராலேயோ என்னை மக்கள் மத்தியில் இருந்து பிரிக்க முடியாது. ஒவ்வொரு வீட்டிலும், விஜய்யும், விஜியும் இருக்கும் வரைக்கும் என்னை மக்கள் மத்தியிலிருந்து பிரிக்க முடியாது.
“கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம்” - நெல்லையில் விஜய் பேசியது என்ன?
Ad Space
Ad Space
Ad Space
Ad Space