கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் 9 இராணுவ சிப்பாய்கள் பெயரிடப்பட்டு, அவர்களில் எழுவருக்குத் தண்டனை வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் சாதாரண சிப்பாய்கள் மாத்திரமேயாவர். மாறாக இராணுவ ஜெனரல்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை. இது இக்குற்றங்களுக்கு உண்மையில் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் விடுவிக்கப்பட்டு, சாதாரண அடிமட்ட சிப்பாய்கள் பொறுப்பாளிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்களா என்ற கேள்வியைத் தோற்றுவித்திருப்பதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்னவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தினால் 'செம்மணி மனிதப்புதைகுழி: நாங்கள் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்' எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் நீட்சியாக, அதனை அடிப்படையாகக்கொண்டு ஜெனிவாவில் வியாழக்கிழமை (30) இலங்கை நேரப்படி மாலை 6.00 மணிக்கு நிகழ்நிலை முறைமை ஊடாக விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கலந்துரையாடலில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இரத்னவேல் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
இலங்கை பொறுத்தமட்டில் செம்மணி விவகாரம் மிகமுக்கியமானதாகும். ஏனெனில், பொதுமக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகமோசமான அட்டூழியங்களின் சாட்சியங்களை அது தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்த மனிதப்புதைகுழியானது இராணுவத்தில் பணிபுரிந்த ஒரு சிப்பாய் மூலமே வெளிப்படுத்தப்பட்டு, அதனூடாகவே இவ்விடயம் சர்வதேச சமூகம் வரை பெரும் அவதானத்தைப் பெற்றது. பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி கடத்தல் மற்றும் படுகொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர், அந்த சிப்பாய் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட மேலும் பலரது உடல்கள் புதைக்கப்பட்ட மனிதப்புதைகுழிகள் இருக்கின்றன என்ற உண்மையை வெளிப்படுத்தினார். 1998 ஆம் ஆண்டு ஜுலை 3 ஆம் திகதி மேல் நீதிமன்றம் அவருக்குத் தண்டனை வழங்கியதன் பின்னர், அவர் மனிதப்புதைகுழிகள் உள்ள இடங்களையும் வெளிப்படுத்தினார். அதனையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இருப்பினும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலையீட்டை அடுத்து, 2000 ஆம் ஆண்டு அந்த அகழ்வுப்பணிகள் வேண்டுமென்றே இடைநிறுத்தப்பட்டதை அடுத்து, உலகம் அதனை மறந்துவிட்டது. எனினும் சுமார் 25 வருடங்களின் பின்னர் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் செம்மணியில் உள்ள இந்து மயானத்தைப் புனரமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு, அப்பகுதி தோண்டப்பட்டபோது அதிலிருந்து மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டறியப்பட்டன. அதனையடுத்து யாழ் நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அப்பகுதியில் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட சுமார் ஒருவருடகாலத்தில் 479 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனவே இராணுவத்தினர் அறியாமல் எந்தவொரு அமைப்போ அல்லது தனிநபரோ இந்தளவு மோசமான குற்றங்களை நிகழ்த்தியிருப்பதற்கு வாய்ப்பு இல்லை. செம்மணியில் உள்ள இந்து மயானம் உள்ளிட்ட பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்ததுடன், அதனை அண்மித்த பகுதியிலேயே இராணுவத்தின் பிரதான முகாமும் செய்மதி முகாம்களும் நிறுவப்பட்டிருந்தன.
செம்மணியிலுள்ள இந்து மயானத்தில் இந்துக்களின் மதக் கோட்பாடுகளின்படி உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படும். இந்துக்கள் உயிரிழந்த உடல்களைப் புதைப்பதில்லை. எனவே தற்போது அங்கிருந்து கண்டறியப்பட்டுள்ள மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன. அதுமாத்திரமன்றி அங்கு ஒன்றன்மேல் ஒன்றாகவும், நேர்த்தியற்ற முறையிலும் உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதானது இது வழமையாக இடம்பெறக்கூடிய இயல்பானதொரு விடயம் அல்ல என்பதைக் காண்பிக்கிறது. ஆகையினால் நீதிமன்றம் அதனை ஒரு குற்றப்பிரதேசமாக அறிவித்திருக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதுவரை செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் பல்வேறு தரப்பினரதும் பங்களிப்புடன் முறையான விதத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
அதேவேளை கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் 9 இராணுவ சிப்பாய்கள் பெயரிடப்பட்டு, அவர்களில் எழுவருக்குத் தண்டனை வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் சாதாரண சிப்பாய்கள் மாத்திரமேயாவர். மாறாக இராணுவ ஜெனரல்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை. இது இக்குற்றங்களுக்கு உண்மையில் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் விடுவிக்கப்பட்டு, சாதாரண அடிமட்ட சிப்பாய்கள் பொறுப்பாளிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்களா என்ற கேள்வியைத் தோற்றுவித்திருக்கிறது. இருப்பினும் இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கின் பின்னணியில் நோக்குகையில், இது ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.
எது எவ்வாறெனினும் பாதிக்கப்பட்ட தரப்பினர் அகழ்வுப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியிருப்பதுடன், உண்மை வெளிக்கொணரப்படவேண்டும் என்பதே அவர்களது தேவைப்பாடாக இருக்கிறது.
சாதாரண அடிமட்ட சிப்பாய்கள் தண்டிக்கப்பட்டு உண்மையான பொறுப்பாளிகள் தப்பிவிட்டார்களா?
Ad Space
Ad Space
Ad Space
Ad Space