பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சிரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்துக் கொண்டிருந்த வேளையில், தலைநகர் டமஸ்கஸில் அடுத்தடுத்து பயங்கர குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாராவைச் சந்திப்பதற்காக அங்குள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் நுழைந்த சில நிமிடங்களிலேயே, நகரின் மையப்பகுதியில் இந்த வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
டமஸ்கஸின் மையப்பகுதியில் அமைந்துள்ள 'போர் சீசன்ஸ்' ஹோட்டலுக்கு அருகிலேயே இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்துள்ளதாகச் சிரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிரியாவுக்கு சென்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இந்த ஹோட்டலிலேயே தங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து பெருமளவில் புகை மூட்டம் எழும்புவதைக் காணக்கூடியதாக இருந்ததுடன், வாகனம் ஒன்று தீப்பற்றி எரிவதும், வீதிகளில் இரத்தக் கறைகள் படிந்திருப்பது போன்ற காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. எனினும், இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தோர் குறித்த விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை என்பதுடன், சிரிய அதிகாரிகளும் இது குறித்து உடனடியாக எவ்வித உத்தியோகபூர்வ கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இந்தத் திடீர் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும், அவர் முற்றிலும் காயமடைவதிலிருந்து தப்பியுள்ளதாகவும் பாரிஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், திட்டமிட்டபடி பிரான்ஸ் ஜனாதிபதியின் சிரியாவுக்கான உத்தியோகபூர்வ பயணத் திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனவும் பிரான்ஸ் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
சிரியாவில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே குண்டுவெடிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space