தற்போதைய வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் - நினோ நிலைமை மற்றும் சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நீர் முகாமைத்துவம் குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று வியாழக்கிழமை (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
எதிர்கால எதிர்வுகூறல்களின்படி இந்தவருடம் கிடைக்கக்கூடிய மழைவீழ்ச்சி குறித்தும், தற்போது நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு குறித்தும் இங்கு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, வலுசக்தி விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக நீர்மின் உற்பத்தி, குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் சிறுபோக பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீரை வழங்குதல் ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, அவசியமான நீர் முகாமைத்துவம் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால்காந்த, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பி. விக்ரமசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, மகாவலி பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஜே.கே. ஹேரத், நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் கித்சிறி வெலிகெபொலகே, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார ஆகியோரும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
சிறிலங்கா ஜனாதிபதி தலைமையில் நீர் முகாமைத்துவம் குறித்த கலந்துரையாடல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space