'தவறிழைக்கும் அமைச்சர்கள் தங்களின் பதவிகளில் ஒட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள்' என்ற புதிய அரசியல் கலாச்சாரம் குறித்துப் பேசிய ஜே.வி.பி அரசாங்கத்தின் அமைச்சர், தற்போதும் பதவி விலகாமல் இருப்பது அவர்களின் போலித் தன்மையைக் காட்டுகிறது. அவர் தானாக விலகாவிட்டால் ஜனாதிபதி அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கொள்கைப் பிரகடனத்தில் சிறைச்சாலை வன்முறைகளைத் தடுத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் கடந்தும் இந்த நெருக்கடியைத் தீர்க்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை வன்முறை வெடித்தபோதே, திங்கட்கிழமை மீண்டும் அசம்பாவிதம் ஏற்படாதிருக்க அமைச்சர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். அமைச்சரின் அலட்சியத்தால் திங்கட்கிழமை அதைவிடப் பயங்கரமான மோதல் ஏற்பட்டு அதிகாரிகள் பலியாகினர். உரிய நேரத்தில் தங்களுக்கு மேலிடக் கட்டளைகள் கிடைக்காமையே இப் பேரழிவுக்குக் காரணம் என இறுதிச் சடங்கின் போது சிறைச்சாலை அதிகாரிகளே அமைச்சரிடம் நேரடியாகக் குமுறியதை ஊடகங்களில் காண முடிந்தது.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு 159 பெரும்பான்மை பலம் உள்ளதால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றுப்போகும் என்பதைத் நாங்கள் அறிவோம். ஆனால் பாராளுமன்றப் பலத்தை விடவும் அமைச்சரின் தோல்விகளை நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவே இந்த விவாதம் கோரப்பட்டது.
அரசாங்கத்தின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்துக்குள் கடமையில் இருந்தபோதே இந்த அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதால், அவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச இழப்பீட்டை வழங்கவேண்டும். இத்தகைய மனித உரிமைமீறல்கள் இலங்கைக்குக் கிடைக்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையையும் கடுமையாகப் பாதிக்கும் என்றார்.
ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space