இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினம் முதன்முதலாக 1991 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று, டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களின் மருத்துவத் துறைக்கான மகத்தான பங்களிப்பை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்பட்டது.
டாக்டர் பி.சி. ராய் அவர்கள் 1882 ஜூலை 1 அன்று பிறந்து, 1962 ஜூலை 1 அன்று மறைந்தார். ஒரே நாளில் பிறந்து, அதே நாளில் மறைந்தது குறிப்பிடத்தக்க ஒரு அபூர்வமான நிகழ்வாகும்.
டாக்டர் பிதான் சந்திர ராய் சிறந்த மருத்துவர், கல்வியாளர், சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சேவகர் மற்றும் புகழ்பெற்ற அரசியல் தலைவர் ஆவார்.
அவர் 1948 முதல் 1962 வரை 14 ஆண்டுகள் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக பணியாற்றினார்.
அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி, 1961 பிப்ரவரி 4 அன்று இந்தியாவின் உயரிய “பாரத ரத்னா” வழங்கப்பட்டது. தனது வாழ்நாள் முழுவதையும் மக்களின் நலனுக்காக அர்ப்பணித்த அவர், எண்ணற்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து, கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளித்தார்.
அவரது நினைவாக 1976 ஆம் ஆண்டு பி.சி. ராய் தேசிய விருது நிறுவப்பட்டது. மருத்துவம், அறிவியல், பொதுநலன், தத்துவம், கலை மற்றும் இலக்கியம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை இந்த விருது கௌரவிக்கிறது.
2026 ஆம் ஆண்டிற்கான தேசிய மருத்துவர்கள் தினத்தின் கருப்பொருள்: “Behind the Mask: Who Heals the Healers?” (முகமூடிக்குப் பின்னால்: மருத்துவர்களைக் குணப்படுத்துவது யார்?)
இந்தக் கருப்பொருள், எப்போதும் நோயாளிகளின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கும் மருத்துவர்களின் மனநலம் மற்றும் உணர்வு நலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. பிறரின் உயிரைக் காக்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் மருத்துவர்களுக்கும் தேவையான ஆதரவு, புரிதல் மற்றும் பராமரிப்பு கிடைக்க வேண்டும் என்பதையும், அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் சமூகத்திற்கு தங்களின் அரிய சேவையை தொடர்ந்து வழங்க முடியும் என்பதையும் இந்தக் கருப்பொருள் நினைவூட்டுகிறது.
உயிர் காக்கும் மருத்துவ சேவையில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவ நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு மருத்துவத் துறையில் சிறந்து விளங்குவதற்கு அடிப்படையாக இருப்பது மருத்துவர்களே.
தமிழ்நாட்டில் மருத்துவரின் நீண்ட கால கோரிக்கைகளான, “ ஊதிய மாற்றத்திற்கான அரசு ஆணை எண் 354 ஐ செயல்படுத்த வேண்டும்.
கொரோனா பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் பணியில் உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு பணி ஆணை வழங்க வேண்டும்.“
ஆகியவற்றை பரிசீலித்து தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தேசிய மருத்துவர்கள் தினம்! வைகோ வாழ்த்து
Ad Space
Ad Space
Ad Space
Ad Space