தமிழ்நாட்டில் மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் முறையில் குறைபாடு காரணமாக மின் நுகர்வோர்களுக்கு அதிகப்படியான மின் கட்டணம் பதிவாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
புதிய தவெக அரசு அமைந்ததும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனவும், 500 யூனிட்டுக்கு குறைவாகப் பயன்படுத்துவோருக்கு இச்சலுகை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் 500 யூனிட் மேல் உபயோகிப்போருக்கு வழக்கம்போல் 100 யூனிட் இலவசம் என தெரிவிக்கப்பட்டது. தற்போது வீட்டு மின் நுகர்வோருக்கான கட்டணம் வழக்கத்தை விட அதிகம் வந்துள்ளதாக பொதுமக்களிடையே புகார்கள் எழுந்தன.
வழக்கமாக வெயில் காலங்களில் மின்சார பயன்பாடு அதிகரிப்பதால் மின் கட்டணம் உயர்வது வழக்கம். ஆனால், இந்த முறை வழக்கத்துக்கு மாறாக மிக அதிக மின்சார கட்டண பில் வந்துள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ஆனால் மின்வாரியம் தரப்பில் அதிகப்படியான மின் பயன்பாடு காரணமாகத்தான் கட்டணம் அதிகம் வந்துள்ளதாகவும், குறைவாக பயன்படுத்தியவர்களுக்கு குறைவான கட்டணமே வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளால் சில இடங்களில் மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகியுள்ளதாக நெல்லை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மின்சாரத் துறையின் சில பிரிவுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் அசாதாரணமான பில்லிங் முறைகளால் பொதுமக்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. மீட்டர் கணக்கீடு அல்லது பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளால் வீட்டு மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான மின் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகளால் மதிப்பீட்டின் அடிப்படைக் கள ஆய்வு முறையாக மேற்கொள்ளப்படவில்லை. தமிழகத்தில் மின்னியல் பகிர்மான வட்டங்களில் (இடிசி) ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், தலைமை அலுவலகம் தொடர்ந்து வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின்படியும், சரியான மதிப்பீடு செய்யவும், தவறான பதிவுகளை தவிர்க்கவும், நுகர்வோர் திருப்தியை உறுதி செய்யவும் வேண்டிய நிலையில் இன்னும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவது வருத்தத்திற்குரியது.
மின்வாரிய அதிகாரிகள் தங்களது கடமைகளை முறையாக செய்திருந்தால் இந்தப்பிரச்சினையை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்திருக்கலாம். அதன்படி, ஒவ்வொரு பிரிவிலும் திடீர் ஆய்வு மேற் கொள்ளவேண்டும். கடமையில் அலட்சியம் காட்டும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது தேவையான ஒழுங்கு நடவடிக்கை உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், மேற்பார்வை பொறியாளர் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலர்கள் சரியான முறையில் பணி செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீட்டர் கணக்கீடு - பில்லிங் முறையில் குறைபாடு காரணமாக அதிகப்படியான மின்கட்டணம் பதிவு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space