குவைத் நாட்டில் செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்த நிலையில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.வீட்டுப் பணிப்பெண் உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்புகளுக்காக குவைத் சென்ற இவர்கள், தங்களது ஒப்பந்தப் பணிமனைகளிலிருந்து வெளியேறி, விசா இன்றி பிற இடங்களில் பணிபுரிந்து வந்தபோதே குவைத் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் இன்று அதிகாலை 3:10 மணிக்கு குவைத்தின் குவைத் சிட்டி நகரிலிருந்து ஜஸீரா எயார்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான JN-551 என்ற விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.நாட்டிற்குத் திரும்பிய இப்பிரிவினர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குத் தேவையான போக்குவரத்துச் செலவுகள் மற்றும் நிதியுதவிகளை வழங்கி அவர்களை அனுப்பிவைக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும், சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளில் தங்கியிருப்பதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.