ஒற்றுமை எனும் விடயத்தில் சிங்கள கட்சிகளை விட தமிழ் தேசிய கட்சிகள் பலமாக உள்ளன!
Ad Space
Ad Space
ஒற்றுமை என்னும் விடயத்தில் சிங்கள கட்சிகளை விட தமிழ் தேசிய கட்சிகள் பலமாக உள்ளதாகவும் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து, சமஷ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வுதான் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்று, ஒரு வரியில் ஒரு ஆவணத்தினை நாம் வழங்குவோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
ஒற்றுமையென்னும் விடயத்தில் சிங்கள கட்சிகளை விட தமிழ் தேசிய கட்சிகள் பலமாக உள்ளது. பிரிவினையை ஏற்படுத்துவதற்காக மாத்திரமே, சில சுயநலவாதிகள் தமிழர்களுக்குள் ஒற்றுமையில்லை எனக் கூறி எங்களை, பிரிந்திருக்கும் இனமாக காட்ட முயல்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (31) நடைபெற்ற தந்தை செல்வாவின் 128வது ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
தந்தை செல்வா காலத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் இணைந்து செயற்பட்ட பலர் இன்னும் இந்த மாவட்டத்தில் இருக்கின்றார்கள்.
தமிழரசுக் கட்சியில் எனது பாட்டனார் சீ.மு.இராசமாணிக்கம் ஐயா அவர்கள் தலைவராகயிருக்கும்போது தந்தை செல்வா இந்த மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டபோது இராசமாணிக்கம் ஐயா தேர்தல் பரப்புரைக்கு போகக்கூடாது எனவும் அவர்களுக்கு செருப்புமாலை போடவேண்டும் எனவும் பேசியவர்கள் இன்று இந்த மாவட்டத்தில் தமிழ் தேசியவாதிகளாக பலரால் காட்டப்படுகின்றார்கள்.
ஆனால், உண்மையில் இலங்கை தமிழரசுக் கட்சியில் அந்தக் காலம் தொடக்கம் இந்த காலம் வரையில் தமிழரசுக் கட்சியையும் வளர்த்து இளைஞர் பேரவையுடன் இருந்தவர்களை கேட்டால் தெரியும், தமிழர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்பதை எதற்காக அவர் சொன்னார் என்று.
நாங்கள் எமது நிலத்தை பாதுகாப்பது என்றால், ஒரு அரசியலமைப்பின் ஊடாக, அதிகாரம் தமிழ் மக்களின் கைகளில் இருந்தால் மாத்திரம்தான் எமது நிலத்தினை நாங்கள் பாதுகாக்கமுடியும். இல்லாவிட்டால் எங்காவது காணிகளை பாதுகாக்க ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தே தடுக்கவேண்டிய நிலை இருக்கிறது.
நாங்கள் பொருளாதாரத்தினால் பலமடையும்போதே எமது இளைஞர்களை இங்கு தக்கவைக்கமுடியும். இன்று இந்த நாட்டில் இளைஞர்கள் வாழக்கூடிய சூழ்நிலை இல்லை.
இன்று மின்சார கட்டணம் அதிகரிக்கின்றது. உலக சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி நிலையில் இன்று எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுகின்ற போதிலும் அதற்கு நிகராக சம்பளம் அதிகரிக்குமா என்பது சந்தேகமே.
நாங்கள் மாகாண சபை தேர்தலை, தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கான முக்கிய காரணம், மாகாண சபை தேர்தல் நடைபெற்றால் ஆளுநரின் ஆளுகைக்குள் இல்லாமல் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களின் கீழ் மாகாண சபை இருக்கும். உள்ளூராட்சி மன்றங்களை இயங்கவைப்பதற்கு ஆளுநரோ மாகாண சபையோ தடையாக இருக்காது. அதற்காகவே மாகாண சபை தேர்தலை நடாத்துமாறு கோருகின்றோம்.
உடனடியாக பறிக்கக்கூடிய பழமாக மாகாண சபையும் ஏணி வைத்து ஏறி நாங்கள் பறிக்கக்கூடிய பழமாக புதிய அரசியலமைப்பும் இருக்கும். அதனை நாங்கள் முன்னெடுப்போம். மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதாக இருந்தால் நாங்கள் எங்களது நீண்டகால இலக்கான புதிய அரசியலமைப்பினை அடைந்தால் மாத்திரம்தான் அதனை செய்யமுடியும்.
ஒற்றுமையை பற்றி பேசும்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் உறுதியாக இருந்தார்கள்.
வட்டாரங்களில் பங்காளிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்காத நிலைமைகள் காணப்பட்டன. தவிசாளர், பிரதி தவிசாளர்கள் பங்காளிக்கட்சிக்கு விட்டுக்கொடுக்க முடியாத நிலைமைகள் காணப்பட்டன. பிரிந்து கேட்டபோதும் வடக்கில் பல இடங்களில் இணைந்து ஆட்சி அமைத்தோம்.
இன்று ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று கூறுகின்ற சிலர் மறுபுறத்தில் இவர்தான் ஒட்டுக்குழுக்களை இணைக்கின்றார், இவர்தான் மீண்டும் ஒட்டுக்குழுக்களுடன் பயணிக்கப் பார்க்கின்றார் என்று கூறிவருகின்றனர்.
அவரவர்க்கு தேவை வரும்போது சேர்ந்து இயங்கவேண்டும், தேவை இல்லாதபோது சேர்ந்து செயற்படக்கூடாது என மேலும் தெரிவித்தார்.
Ad Space
Ad Space