சிறுமி ஒருவரை கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்த சம்பவம் மற்றும் அதற்கு முன்னர் இடம்பெற்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சிறுமியின் தாய் நேற்று (8) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அட்டமஸ்தானாதிபதி தேரருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமி கடத்தப்பட்டமை மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பாக நிட்டம்புவ பொலிஸார் நடத்திய விசாரணைகளில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மார்ச் 6ஆம் திகதி சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் ராகம சிறுவர் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டார்.
பாதுகாப்பு மையத்தில் இருந்தபோது, தனக்கு முன்னர் நேர்ந்த துஷ்பிரயோகங்கள் குறித்து சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பில், நிட்டம்புவ பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அனுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகக் கூறப்படும் இடத்தில் அறிவியல் ரீதியான சோதனைகள் நடத்தப்பட்டு, சான்றுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
நேற்று வெள்ளிக்கிழமை (8) இந்த வழக்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
அதன்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியங்களை காணொளி பதிவு செய்ய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கில் சந்தேக நபர்களாக உடமழுவே அட்டமஸ்தானாதிபதி தேரர் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் பெயரிடப்பட்டனர்.
சந்தேக நபரான அட்டமஸ்தானாதிபதி தேரர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சிறுமியை பணத்திற்காக விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சிறுமியின் தாய் நேற்று வெள்ளிக்கிழமை (8) கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான அட்டமஸ்தானாதிபதி தேரரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை நிட்டம்புவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சிறுமி துஷ்பிரயோகம் : அட்டமஸ்தானாதிபதி தேரருக்கு வெளிநாட்டு பயணத் தடை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space