மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திரு விழாவிற்கான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (23) மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி. சோசை அடிகளார் மற்றும் மடு திருத்தலத்தின் நிர்வாகம் ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
மடு அன்னையின் திருத்தலத்தின் போட்டிக்கோ முன்றலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அருட்பணியாளர்கள், அருட் சகோதர சகோதரிகள், இறைமக்கள் அடங்கலாக இறை வழிபாட்டோடு முதலாவது நவநாள் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
முதலாவது நவ நாள் வழிபாட்டின் ஆரம்ப நிகழ்வாக மருதமடு திரு தாயாரின் கொடி மற்றும் பாப்பரசரின் திருக்கொடிகள் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகையினால் இறைவார்த்தை பகிர்வோடு ஆசீர்வதிக்கப்பட்டு ஏற்றி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நவநாள் வழிபாடுகள் திருச்செபமாலைகள் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் நடாத்தப்பட்டு வழமையின் பிரகாரம் நற்கருணை ஆண்டவரின் பிரசன்னம் எழுந்தேற்றம் செய்யப்பட்டு தமிழ் சிங்கள மொழிகளில் மறையுரைகள் வழங்கப்பட்டன.
மறையுரையினை தொடர்ந்து தேவ அழைத்தலுக்கான ஜெபம் இரு ழொழிகளிலும் பரிந்துரைக்கப்பட்டு இறுதியாக நற்கருணை இறையாசீர் ஆனது இறைமக்களுக்கு வழங்கப்பட்டு இரவு செபத்துடன் முதலாவது நாள் வழிபாடுகள் முடிவுற்றது.
மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா ஆண்டுதோறும் ஜூன் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, ஜூலை 2 ஆம் திகதி காலை 6:15 மணிக்கு திருவிழா திருப்பலியுடன் பக்திபூர்வமாக நிறை வடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space