ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தின் ஊடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள்

முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது.

இவ்வாறு சேதமடைந்து காணப்படும் பாலமானது அடிக்கடி உடைவுகள் ஏற்படும்போது தற்காலிக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றதே தவிர, நிரந்தர புனரமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது பாலத்தின் மையப்பகுதியில் உடைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் பாரிய குழியும் காணப்படுகின்றது.

ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தில் பல்வேறு இடங்களில் வெடிப்புக்களும் வீதி பாதுகாப்பு அற்றதாகவும் வீதியில் சில இடங்களில் தாழிறங்கியும் காணப்படுகிறது.

 

பலதடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்து கூறியும் புனரமைப்பு பணிகள் எவையும் நடைபெறவில்லை.

இனி வரும் காலம் மழையுடன் கூடிய காலமாகையால் நீர்மட்டம் உயர்ந்து பாலத்தை மேவி செல்வதோடு, கனரக வாகனங்களும் இதன் ஊடாக செல்லும் போது மேலும் உடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்  அப்பாலத்தினூடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.