இந்திய பிரதமருடன் ஜீவன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்

சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் இந்தியா நோக்கி இன்று வியாழக்கிழமை (20) புறப்பட்ட நிலையில், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளனர்.

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட உயர்மட்ட பிரமுகர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தவுள்ளார்.

இந்த பேச்சுகளில் அமைச்சர் ஜீவன் தொண்டான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினரும் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கை தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், மலையக மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் சம்பந்தமாக இந்திய தரப்புக்கு எடுத்துரைக்கவுள்ளார்.

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அரச அங்கீகாரத்துடன் தேசிய மட்ட நிகழ்வு எதிர்வரும் நவம்பரில் நடத்தப்படவுள்ளது. இது சம்பந்தமாகவும், இந்நிகழ்வில் இந்திய பிரதிநிதி பங்கேற்பதற்கான அழைப்பும் ஜீவன் தொண்டமானால் கையளிக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

அத்துடன், இந்தியாவின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டம், மலையக பல்கலைக்கழக விவகாரம், மலையக மாணவர்களுக்கான இந்திய புலமைப்பரீசில்களை அதிகரித்துக்கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் இந்திய தரப்புடன் கலந்துரையாடுவதற்கு ஜீவன் தொண்டமான் ஈடுபட்டுள்ளார். அவர் பிரத்தியேக சந்திப்புகளிலும் ஈடுபடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, கொந்தளிப்பு நிலையில் உள்ள இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது சம்பந்தமாகவும் இலங்கை, இந்திய தரப்புகள் பேச்சு நடத்தவுள்ளன. மீனவர் பிரச்சினை சம்பந்தமாக தமிழக முதல்வர் விடுத்துள்ள கோரிக்கை கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்று இந்தியா செல்வதற்கு முன்னர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.