உடுவரகெதர உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்

ஊடக அடக்குமுறையினை கட்டவிழ்த்து கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென யாழ்.ஊடக அமையம் வேண்டிநிற்கின்றது.

இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடத்திலிருக்கின்ற தரப்புக்கள் ஊடகங்களை அடக்கியாள நினைப்பது வழமையான தொடர்கதையாகவே இருந்துவருகின்றது.

அத்தகைய ஊடக அடக்குமுறைகளால் 39 தமிழ் ஊடகவியலாளர்களையும் ஊடகப்பணியாளர்களதும் இன்னுயிர்களை இழந்தும் காணாமல் பறிகொடுத்தும்  நீதி கோரி போராடிவருகின்ற யாழ்.ஊடக அமையம் கைதை வன்மையாக கண்டித்து நிற்கின்றது.

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்த முடியாதென்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இலங்கை இளம் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் சுயாதீன ஊடகவியலாளருமான தரிந்து உடுவரகெதர  வெள்ளிக்கிழமை (28) தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, பொரளையில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டே ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைதுசெய்யப்பட்டதுடன், இது தற்செயலாக நடந்த சம்பவமாக நாம் பார்க்கவில்லை. திட்டமிட்ட வகையில் தாக்கப்பட்டு பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்ச்சியாக ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர, தமது பணிகளை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரும் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களும் தடைகளை ஏற்படுத்துவதன் ஊடாக இலங்கையின் ஊடகச்சுந்திரம் தொடர்ந்தும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.

பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட ஊடகவியலாளரை பல மணி நேரங்களுக்குப் பின்னரே பொலிஸார், சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தியுள்ளதாக அறிகின்றோம்.

சட்ட வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய ஊடகவியலாளரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தரிந்துவின் இரு கைககளும் கைவிலங்கிடப்பட்ட நிலையில் உள்ளது. ஊடகவியலாளர் ஒருவரை தாக்கியது மட்டுமல்லாது அவரது அடிப்படை உரிமைகளையும் மீறி, படுமோசமான முறையில் அவரை நடத்தும் இலங்கைப் பொலிஸாரின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஏற்கனவே படுகொலையான காணாமல் ஆக்கப்பட்ட எமது நண்பர்களிற்காக நீதி கேட்டு சர்வதேசத்தின் கதவை தட்டிவருகின்ற நாம் இவ்வேளையில் எமது சக இன ஊடக நண்பர்களுடன் இன மத மொழி வேறுபாடுகளை தாண்டி ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி கைகோர்த்துக்கொள்கின்றோம்.