காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து வெளியேற கால அவகாசம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கொழும்பு வீதி நாவலடி தொடக்கம் ஜெயந்தியாலை பிரதேசம் வரையிலான ரயில் தண்டவாளத்துக்கும் கொழும்பு வீதிக்கும் இடையிலான 28 ஏக்கர் அரச காணிகளை சட்ட விரோதமாக அபகரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து வெளியேற 2 நாள் அவகாசம் வழங்கியுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் கொழும்பு வீதிக்கும் ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கும் இடையிலான கொழும்பு வீதியை அண்டிய பகுதியிலுள்ள 28 ஏக்கருக்கு மேற்பட்ட அரச காணிகளை கடந்த சில வாரங்களாக சிலர் சட்டவிரோதமாக உள்நுழைந்து காட்டு மரங்களை வெட்டி கம்பி வேலிகள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர்.

இந்த நிலையில் அந்த காணி அபகரிப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன்  பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்களை சட்ட ரீதியாக அரசாங்கத்திடம் இருந்து காணியை பெறுமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.

இந்த காணி அபகரிப்பு தொடர்பாக ஏற்பட்ட சார்ச்சையையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தலைமையிலான பொலிசார் குறித்த பகுதிக்கு சென்று காணி அபகரிப்பில் ஈடுபடுபவர்களிடம் இது அரச காணி இந்த காணியின் அமைக்கப்பட்ட கம்பி வேலிகளை அகற்றிக் கொண்டு உடனடியாக வெளியேறவேண்டும் இல்லாவிடில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இவைகளை அகற்றிச் செல்வதற்கு 2 நாள் கால அவகாசம் வழங்குவதாக காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.