கிராண்ட்பாஸ் கொலை தொடர்பில் ஐவர் கைது

கிராண்ட்பாஸ் பகுதியில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் ஐந்து பேர், நேற்று (06) இரவு கைது செய்யப்பட்டதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர், கொல்லப்பட்ட நபர், போதைப்பொருள் தொடர்பான பணத் தகராறு காரணமாக மற்றுமொருவரை இதே போன்று கூரிய ஆயுதங்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியமையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பிரதான சந்தேக நபரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டி பகுதியை  சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.