குருந்தூர்மலையில் வரலாற்று புகழ்மிக சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் பாரம்பரியமான, வரலாற்று  புகழ்மிக்க சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை நாம் அனைவரும் இணைந்து முன்னெடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

குருந்தூர்மலையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற பொங்கல் வழிபாட்டில் பங்கேற்று, பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மிகப்பெரிய அடாவடிகளுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில் குவிக்கப்பட்ட பொலிசார் மற்றும், விசேட அதிரடிப்படையினருக்கு மத்தியிலும், குருந்தூர்மலையில் அத்துமீறி விகாரை அமைத்திருக்கின்ற பிக்குவின் அடாவடிகளுக்கு மத்தியிலும் இந்த பொங்கல் நிகழ்வு மக்களுடைய கூட்டு முயற்சியாலும், அனைவருடைய ஒத்துழைப்புடனும் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறுபட்ட தடைகள் இருந்தும் அந்தத் தடைகளைத் தாண்டி நீதியின் பக்கம் நின்ற முல்லைத்தீவு மாவட்ட நீதித்துறையினுடைய நியாயமான பக்கங்கள் எண்ணத்திலெடுக்கப்பட்டு, அந்த எண்ணத்தின் அடிப்படையில் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் நடைபெற்ற இந்த பொங்கலுக்காக நாம் அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

தமிழர்கள் ஆதிகாலம் தொட்டு அவர்கள் வணங்கிவந்த, வாழ்ந்துவந்த அவர்களது வரலாற்று அடையாளமான குருந்தூர் மலையிலே, தமிழர்களுடைய இருப்பினை இல்லாமல்செய்து குருந்தூர்மலையை பௌத்த தொல்லியல் இடமாக ஆக்கிரமித்து விகாரை அமைக்கும் முயற்சிகைளை மேற்கொண்டு அந்தவிகாரை எந்தவித அனுமதியுமின்றி தொல்பொருள் திணைக்களத்தினுடைய முழுமையான ஆதரவுடனும், அரச ஆதரவுடனும் கட்டப்பட்டிருக்கின்றது.

அதேவேளை ஆதிசிவன் ஐயனார் இருந்த இடங்கள் அழிக்கப்பட்டு, இந்த இடத்தில்தான் நீங்கள் பொங்கவேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. அதிலும் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக நிலத்திலே கற்கள் வைத்து கற்களுக்குமேல் தகரம்வைத்து தகரத்தின்மேல் கற்கள் வைத்தே பொங்கல் செய்யவேண்டும் என்ற அதிசயமான சட்டங்களை இந்த மண்ணில், இந்த ஆலயத்தில் என்னால் காணமுடிந்தது.

தொல்லியல் என்பது அடையாளமாக வைத்துப் பார்க்கவேண்டிய இடமே தவிர, அந்த இடம் விகாரை கட்டப்படவேண்டிய இடமல்ல.

இங்கே சிங்களமக்களுக்கு ஒரு சட்டம், தமிழர்கள் வாழ்கின்ற பூர்வீக நிலங்களுக்கொரு சட்டமாக ஆக்கிரமிப்பாளர்களது நிலையை நாம் இந்த இடத்தில் காண்கிறோம்.

இது தமிழர்களுடைய இருப்பையும், அவர்களுடைய எதிர்கால வாழ்வையும் மிகப்பெரிய கேள்விக்குட்படுத்தியிருக்கின்றது.

ஆனாலும் நாம் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், எங்களுக்குள் இருக்கிற வேற்றுமைகளுக்கு அப்பால் ஒற்றுமையாக அனைத்துத் தமிழர்களும் இணைந்து எம்பெருமான் சிவனுக்குரிய அரோகரா என்ற நாமத்துடன் இந்த பொங்கல் விழாவைச் செய்திருக்கின்றோம். இந்தப் பொங்கல் விழா தொடர்ந்து மாதாந்தம் இடம்பெறும்.

அதேவேளை எங்களுடைய மக்களின் இருப்பும் அவர்களுடைய தொன்ம அடையாளங்களும் பேணப்படும் வகையில் எங்களுடைய செயற்பாடுகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

இந்த இடத்திலே,  பாரம்பரியமான வரலாற்று  புகழ்மிக்க சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் அனைவரும் இணைந்து முன்னெடுப்போம் – என்றார்.