குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது!

நேற்று (06) பிற்பகல் கொலன்னாவ பகுதியில் உள்ள வீதியில் நபர் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

பொலிஸாரால் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து அவர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இரண்டு பெட்ரோல் போத்தல்களை வைத்துக்கொண்டு நடுவீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் விளக்கமளித்தனர்.

ஆனால் அந்த நபர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொள்ள முற்பட்டதையடுத்து அதனை தடுக்க பொலிஸார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், அவரது பத்து வயது மற்றும் ஏழு வயது சிறுமிகளை பொலிஸார் அவரிடம் இருந்து மீட்டனர்.

பின்னர் அவரை பொலிசார் கைது செய்தனர்.

சந்தேக நபர் ஏற்கனவே தனது உடலில் பெட்ரோலை ஊற்றியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் வைத்திருந்த கூரிய கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பின்னர், இரண்டு சிறுமிகளும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பொறுப்பேட்கப்பட்டனர்.

சந்தேகநபருக்கு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்ததால் அவரைக் கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதொட்டமுல்லையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்றதாக அந்தப் பிரிவின் விசேட புலனாய்வு பிரிவு இலக்கம் 2 பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது, சந்தேகநபர் கத்தியைக் காட்டிவிட்டு தப்பியோடியதையடுத்து அவரது கைத்தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாரை பயமுறுத்தும் நோக்கில் சந்தேக நபர் இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வீடுடைத்து கொள்ளை உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானதன் காரணமாக அவரது மனைவி, சிறுமிகளுக்கு ஒரு வயது இருக்கும் போது கைவிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்றிரவு முதல் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த சிறுமிகள் இருவரும் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர் இன்று (07) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரது இரண்டு மகள்களையும் நன்னடத்தை அதிகாரிகள் மூலம் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.