சகோதரன் தயாரித்த கடவுச்சீட்டில் வந்தவர் சிக்கினார்

போலி கனேடிய கடவுச்சீட்டில் இலங்கைக்குள் நுழைந்து இங்கிலாந்துக்கு தப்பிச் செல்ல முயற்சித்த சாடியன் பிரஜையான ஆசிரியர் ஒருவர் , கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கட்டாரின் தோஹாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இவர் சவூதி அரேபியாவில் அரபு மொழி கற்பிக்கும் 31 வயதான சாடியன் பிரஜையான ஆசிரியர் ஆவார்.

அவர் சனிக்கிழமை (12) மாலை 04.30 மணியளவில் கட்டார் தோஹாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-654 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் தனது கனேடிய கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை தனது குடிவரவு அனுமதிக்காக கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள குடிவரவு அதிகாரியிடம் கையளித்துள்ளார்.

கடவுச்சீட்டு தரமில்லாமல் தயாரிக்கப்பட்டதாக அங்கு பணிபுரிந்த அதிகாரி உணர்ந்ததால், பயணி மற்றும் அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் முதன்மை குடிவரவு அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணையின் போது, ​​தான் ஒரு சாடியன் பிரஜை என்றும், தனக்காகவே இந்த கடவுச்சீட்டை தனது சகோதரர் தயாரித்து கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு வந்து 05 நாட்களின் பின்னர் இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் இவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த சாடியன் நாட்டு பிரஜையை கைது செய்த குடிவரவு அதிகாரிகள் அவரை கட்டார்ன் தோஹாவிற்கு நாடு கடத்துவதற்காக கட்டார் ஏர்வேஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.