சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர்த்தட்டுப்பாடு தொடர்பில் ஆராய குழுவொன்றை நியமிக்க தீர்மானம்

சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து நீரைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பதாக மின்சார சபை இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவேண்டும் என்றும் நீர்த்தேக்கத்தின் நீர்த்தட்டுப்பாடு தொடர்பில் ஆராய குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் நீர்பாசன இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து நீரை பெற்றுக் கொள்வதற்கு முன்பதாக மின்சார சபை இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவேண்டும். முதலாவதாக இதனை பெற்றுக்கொவதற்கான இணக்கப்பாட்டை மின்சாரசபை ஏற்படுத்திக் கொண்டுள்ளதா?  இது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிப்பேன்.

மேலும் சமனலவெவயில் நீர் மட்டம் குறைவடையும் போது என்ன செய்வது என்பது தொடர்பில் மின்சார சபை கலந்தாலோசித்துள்ளதா? மேலும் பயிர்ச்செய்கை போகத்தை ஆரம்பிக்கும் போது நீரைப்பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதா? இவ்வாறு தாமதிக்கும் போது அவர்கள் தமது பொறுப்பை சரிவர நிறைவேற்றியுள்ளர்களா? என இவை அனைத்தையும் ஆராய்ந்து கண்டிப்பாக அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம். இவ்வாறான தவறுகள் மீண்டும் நடக்க கூடாது. இது மிகவும் பொறுப்பு வாய்ந்த பாரிய பணியாகும் என்றார்.