சவூதிக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த நபர்

சவூதி அரேபியாவுக்கு  வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி இருவரிடம் 160,000 ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட்ட மட்டக்களப்பு – இருதயபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை நேற்று  (18) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு அனுப்புவதாக கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 100,000 ரூபாவும் இன்னொருவரிடம் 60,000 ரூபாவையும் பெற்றுக் கொண்டு கடந்த 7 மாதங்களாக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஏமாற்றி வந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து குறித்த போலி முகவரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்த பொலிஸார் விசாரணையின் பின்னர் மோசடியில் ஈடுபட்ட  அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரை இன்று சனிக்கிழமை மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.