சாவகச்சேரி வாகன விபத்தில் யாழ். பாடசாலை மாணவன் பலி!

தென்மராட்சி சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் அருகில் இன்று (13) இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மாட்டு வண்டி சவாரி போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச் சென்ற கன ரக லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற யாழ். இந்து கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவரே உயிரிழந்துள்ளார். அவர் சாவகச்சேரி, கண்டுவில் வீதியைச் சேர்ந்த 19 வயதான சிவபாலன் பிரவீன் என்ற மாணவர் ஆவார்.

இந்நிலையில், மாணவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.