சிப்பாயின் சிதைந்த சடலம் தெற்கில் மீட்பு!

படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரின் சிதைந்த நிலையிலான சடலம் ஒன்று குருசிங்ககொடை பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காலி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – வெல்லாவெளி இராணுவ முகாமில் பணிபுரிந்த 35 வயதுடைய விஷான் பிரதீப் விதானச்சி என்ற இராணுவ வீரரே உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த 14ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதன் பின்னர், அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனவும், பின்னர் கால்வாயில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தேகம நீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இது தொடர்பில் பத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.