ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி சேகரிப்பு

நிதி அமைச்சின் வரி கொள்கை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுக்கு யார் வழங்கியது. ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி சேகரிப்பதற்காக கோதுமை மா விநியோகத்தில் ஈடுபடும் பிரதான இரு நிறுவனங்களுக்கு நிதி நிவாரணம் யார் வழங்கியது. சாகல ரத்நாயக்கவை விசாரிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை குறைவடைந்துள்ள நிலையில் சந்தையில் கோதுமை மாவின் விலை குறைக்கப்படவில்லை.பேக்கரி உற்பத்திகளுக்கு மாத்திரம் குறைந்தபட்ச அளவில் விலை குறைக்கப்பட்டுள்ளது.

கோதுமை மா இறக்குமதி மற்றும் விநியோகத்தில் ஈடுபடும் பிரதான நிறுவனங்கள் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குகின்றன. இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி சேகரிப்பதற்காக  கோதுமை மா விலை குறைக்காமல் அதன் பயன் இந்த இரண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் வரி கொள்கை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுக்கு யார் வழங்கியது. அனுமதி பத்திரம் இல்லாமல் கோதுமை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என்ற வெளியான தீர்மானம் அமைச்சரவையில் எடுக்கப்பட்டதொன்றல்ல.

ஆகவே பிரதான நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கியது யார் ? இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை விசாரிக்க வேண்டும் என்றார்.