தமிழர் – சிங்களவர்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது!

தமிழர், சிங்களவர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை பழைய செம்மலை நீராவியடி ஆலய உற்சவத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவமானது இன்று இடம்பெற்றுள்ளது. அதிகளவான பக்தர்கள் கூடி வருகைதந்து எம்பெருமானுடைய ஆசீர்வாதத்தை வேண்டி சென்றார்கள்.

இதில், குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று நான் முல்லைத்தீவினை சேர்ந்தவன் என்பதனால் நீராவியடி பிள்ளையார் ஆலயம் என்பது நாங்கள் சிறுவயதில் இருக்கும்போது கூட இந்த வீதியால் கொக்குளாய், கொக்குதொடுவாய் பகுதிக்கு செல்லும் போது நீராவியடி பெரிய ஏற்றம் என நாங்கள் சைக்கிளில் வரும்போது நின்று இந்த பிள்ளையாருக்கு கற்பூரம் கொழுத்தி வேண்டுதலை வேண்டி செல்வது வழமை.நாங்கள் மட்டுமல்ல இதனால் செல்லும் மக்களும் அப்படிதான்.

அப்போது இந்த இடத்தில் ஒரு சிங்களவனும் இல்லை ,பௌத்தனும் இல்லை  ஆனால் மக்கள் இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்டதன் பின்னர் இந்த இராணுவ முகாம் இங்கே வந்துவிட்டது. இராணுவ முகாம்களை அங்கங்கே அமைத்து இராணுவ முகாம்களின் துணிவுடன் இனவாத பிக்குகள் ஆதிக்கம் செலுத்தியே இங்கு ஆக்கிரமிப்புக்கள் நடந்தது.

புத்தர் சொல்லவில்லை ஆக்கிரமிப்பை செய்யுங்கள் என்னை வீதியிலே கொண்டுபோய் இருத்துங்கள் என. ஆனால் புத்தர் பெயரை சொல்லி இனவாதிகள், இனவாத சிந்தனையுள்ளவர்கள் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்று ஒன்றும் இல்லாது தனியாக இருந்த பிள்ளையார் இருந்த இடத்தில் புத்தர்சிலையை நிறுவியிருக்கின்றார்கள்.

இங்கு வந்து பார்ப்பவர்களுக்கு தெரியும் எவ்வாறான மோசமான ஆக்கிரமிப்புடன் தான் இங்கு இருக்கிறார்கள். மக்கள் வழிபட கூட ஒரு சிறிய இடம் தான் இருக்கின்றது. மக்களின் வழிபாட்டு பாதுகாப்புக்காக ஆலயத்தின் அருகாமை கட்டிடங்கள் கட்டிவிடலாம் ஆனால் நீதிமன்றின் தீர்ப்புக்கமைய பொறுமையோடு காத்து கொண்டிருக்கின்றோம்.

அந்தவகையில் புத்தர் பெயர்சொல்லி இனவாதிகள் தமிழர், சிங்களவர் இடையே பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்றே இந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது என தெரிவித்தார்.