தலையில் ஏதாவது இருந்திருப்பின் மேர்வின் சில்வா இப்படி சொல்லியிருக்கமாட்டார்

மிக மோசமான யுத்தத்தை கடந்து வந்துள்ள நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் தலையில் எதுவுமில்லாதவர்கள் போன்று மேர்வின் சில்வா கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியதும், கவலைக்குரியதுமாகும். என சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் தெரிவித்தள்ளார்.

வடக்கில் விகாரைகள் மீதோ அல்லது பிக்குகள் மீதோ கை வைத்தால் தமிழர்களின் தலைகளுடன் களனிக்கு திரும்புவேன் என மக்கள் மத்தியில் வெறுப்பையும் இனகுரோதத்தையும் ஏற்படுத்தும்  வகையில் அவர் பேசியிருப்பது  தலையில் எதுவும் இல்லாதவர்களின் பேச்சு போன்றே அமைந்துள்ளது. இந்த நாட்டில் இன்னும் நிலையான அமைதி நிலாவாமைக்கு ஒவ்வொரு இனத்திற்குள்ளும் மேர்வின் சில்வா போன்றவர்கள் இருப்பதே காரணமாக இருக்கிறது. இவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகள் எனத் தெரிவித்த அவர்

ஒவ்வொரு இனத்திற்குள்ளும் இருக்கின்ற மேர்வின் சில்வா போன்றவர்கள் சமூகத்திலிருந்து அகறப்பட வேண்டியவர்கள் வெறுப்பு பேச்சுக்கள், அப்பாவி மக்களிடம் இனவாதத்தை தூண்டிவிடுகின்ற செயற்பாடுகள், இந்த நாட்டை ஒரு போதும் நிரந்தர அமைதியை நோக்கி கொண்டு செல்லாது.

ஆகவே பொது மக்கள் மேர்வின் சில்வா போன்றோரின் கருத்துக்களுக்கு இடம்கொடுக்காது நிதானமாக சிந்தித்து நாட்டை நிலையான அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் கொண்டு செல்லும் வகையில்  செயற்பட வேண்டும் அனைத்து இனங்களுக்கிடையேயும் நல்லிணக்கமும், சமத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.