நம்பிக்கையில்லா பிரேரணையில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் எனக்கு ஆதரவளிக்க இணக்கம்

எனக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலரும் ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு கையளித்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த  கருத்துக்கள் 

ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகருக்கு கையளித்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எனக்கு ஆதரவளிப்பதற்கு இணக்கி இருக்கிறார்கள்.

ஏனெனில் நம்பிக்கையில்லா பிரேரணையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் காரணங்கள் அனைத்தும் உண்மைக்கு புரம்பானவை என்பது தற்போது விஞ்ஞான ரீதியில் ஒப்புவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு உள்வாங்கி இருக்கும் பிரதான குற்றச்சாட்டான தரமற்ற மருந்து கொண்டுவந்தமை மற்றும் மருந்து ஒவ்வாமை காரணமாக  நோயாளர்கள் மரணித்தார்கள் என்ற விடயங்கள் தற்போது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசேட வைத்திய நிபுணர்களின் பங்குபற்றலுடன் நியமிக்கப்பட்டிருக்கும் தொழிநுட்ப குழுவினால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

அத்துடன் குறித்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எனக்கு அறியத்தந்தார்கள்.

அதனால் எனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவாக விவாதித்து வாக்களிப்பதற்காக சபாநாயகரிடம் திகதி ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கேட்டுக்கொள்கிறேன்.

நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டால் அதற்கு முன்னுரிமை வழங்குவது பாராளுமன்றத்தின் சம்பிரதாயமாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் அந்த சம்பிரதாயத்தை மீறி நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதை காலம் கடத்தி வருகிறார்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் நூற்றுக்கு 90வீதம் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.

அதனால் தரமற்ற மருந்து வகைகளை சுகாதார அமைச்சு இறக்குமதி செய்திருப்பதாக எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார்.