நெருக்கடிகளுக்கு மத்தியில் நட்டயீட்டை வழங்குவதில் சிக்கல்

நான் கூறிய நேரத்தில் விவசாயிகளுக்கு நீரை வழங்கியிருந்தால்  பல ஏக்கர் வயல் நிலங்களை பாதுகாத்திருக்க முடியும். இருப்பினும் அதிகாரிகளின் இழுப்பறிகளால் அப்பாவி விவசாயிகளுக்கு அவல நிலை ஏற்பட்டு, நாட்டில் உணவு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் நட்டயீட்டை எதிர்பார்க்கின்றனர். நெருக்கடிகளுக்கு மத்தியில் நட்டயீட்டை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் நீரின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டயீடு வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

சமனல வாவியிலிருந்து    நீர் வழங்கி பல நாட்கள் கடந்துள்ளன. இருப்பினும் இன்று வரை ஒரு துளி நீர் வராத கால்வாய்களும் காணப்படுகின்றன. எங்களுடைய வீட்டுக்கு முன்பாக செல்லும் கால்வாயிலும் கூட நீரில்லை.

இதில் 20 நாட்களாக நீரில்லை. எமக்கு நீரை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை இருந்தது. நாம் சரியான முறையில், சரியான நேரத்தில் நீர் ஒழுங்குப்படுத்தல் தீர்மானங்களை முன்னெடுத்தோம். நான் கூறி நேரத்தில் நீரை வழங்கியிருந்தால் மேலும் பல ஏக்கர் வயல் நிலங்களை பாதுகாத்திருக்க முடியும். ஆனால் துரதிஷ்டவசமாக அதிகாரிகளின் இழுப்பறிகளால் அப்பாவி விவசாயிகளும் அவல நிலைக்கு முகங்கொடுத்து நாட்டில் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதை எவ்வாறு மதிப்பீடு செய்வது? ஏவ்வாறு நட்டயீடு வழங்குவது? என்பது அடுத்த பிரச்சினையாக உள்ளது. மகாவலி எனக்குரிய பகுதியல்ல. உடவள தொடர்பிலும் மின்சார சபையே தொடர்புப்பட்டுள்ளது. இறுதியாக நட்டயீட்டு பிரச்சினை என்னிடமே வந்துள்ளது. எனக்கு தெரியும் இந்த நட்டயீட்டை மதிப்பிட சென்றால் அவப்பெயர் உண்டாகும்.

ஒவ்வொருவரும் நட்டயீட்டை எதிர்பார்க்கின்றனர். அப்படியென்றால் இப்போது வழங்கப்படும் நட்டயீட்டு தொகையும் குறைவடையும். ஆகவே அதற்கான நிதியை பெற்றுக்கொள்வதிலிலும் பிரச்சினைகள் எழுந்துள்ளது. ஏனென்றால் பொருளாதாரத்தில் வங்குரோத்து அடைந்த நாடொன்றின் சகல பிரச்சினைகளுக்கும் மத்தியில் இதனை வழங்க வேண்டி ஏற்பட்டுள்ளது என்றார்.