பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் : நாடாளுமன்ற பராமரிப்புத்துறையின் உதவிப் பணியாளர் பணி நீக்கம்

நாடாளுமன்ற பராமரிப்புத்துறை உதவிப் பணியாளரை நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர பணி நீக்கம் செய்துள்ளார்.

நாடாளுமன்ற பராமரிப்புப் பிரிவில் பணியாற்றும் பெண்கள் மீது துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த பணி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பராமரிப்புத்துறை பிரிவில் உள்ள சில பணிப்பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டுகள் அண்மையில் முன்வைக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பணிப்பெண்கள் வழங்கிய தகவலை கவனத்தில் கொண்டு பராமரிப்புத்துறை உதவிப் பணியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியானதையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளரினால் மூவரடங்கிய குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.