புதைகுழிக்கு நீதிவேண்டிய போராட்டத்தில் உணர்வெழுச்சியுடன் திரண்ட மக்கள்!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் வெள்ளிக்கிழமை (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது, இறுதிக்கட்ட போரின்போது தமிழ் மக்கள் மக்கள் இராணுவத்திடம் உறவுகளைக் கையளித்ததாகக் கூறப்படும் பகுதியான, முல்லைத்தீவு நீதிமன்றிற்கு அருகில் ஆரம்பமானது.

 

 

இவ்வாறு ஆரம்பமான ஆர்ப்பாட்டப் போரணி தொடர்ந்து நீதிமன்றுக்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்து. அங்கு மிகப் பாரிய அளவில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

 

 

மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தனியார் போக்குவரத்து சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.