புத்தளத்தில் தும்பு தொழிற்சாலையில் தீ : பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்

புத்தளத்தில் தும்புச்சாலயில் ஏற்பட்ட தீயினால் இயந்திரங்கள் உட்பட பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் கருகி நாசாமாகியுள்ளன.

புத்தளம் மதுருகம பகுதியில் சனிக்கிழமை (15)  பிற்பகல் தும்புத் தொழிற்சாலை அதனை அண்டிய காட்டுப் பகுதியில் பாரிய அளவில் தீப்பரவியுள்ளது.

இதனை அவதானித்த கிராம மக்கள் உடனடியாக புத்தளம் நகரசபை மற்றும் தம்பபன்னி கடற்படையினருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக விரைந்து தீப்பரவிய இடத்திற்கு நகரசபையின் தீயணைக்கும் படையினரும் கடற்படைத் தீயணைப்புப் படையினரும் கிராம மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறித்த தீயினால் பல இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரம் ஒன்றும் தீக்கிரையாகியுள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான தேங்காய் மட்டைகள், தேங்காய் தும்பு ஆகியன தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீமெந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான காணியில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளமையினால் குறித்த தீ காற்றில் பரவி தும்புத் தொழிற்சாலையில் தீ ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக  தெரிவித்தனர்.