பெண் வேடத்தில் வந்து வன்முறை கும்பல் தாக்குதல்

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில்  உள்ள வீட்டின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டு சேதம் விளைவித்தனர்.

கல்வியங்காட்டில் உள்ள பூதரவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீது   செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை பெண்களின் ஆடை அணிந்து வந்த ஒருவர் உட்பட்ட ஆயுதங்களுடன் வந்த  மர்ம கும்பலே அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன் யன்னல் கண்ணாடிகள், கண்காணிப்பு கமெராக்கள் என்பனவும் அடித்து நொருக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கமெராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு கோப்பாய் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள தரப்பே இங்குள்ள வன்முறை கும்பலுக்கு பணம் அனுப்பி குறித்த வன்முறையில் ஈடுபட்டதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கல்வியங்காட்டில் இவ்வாறான வன்முறை சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றபோதும் குற்றவாளிகளோ வன்முறைக் கும்பலோ கைது செய்யப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.