பெருந் தொகை போதைப்பொருட்கள் மீட்பு!

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் தொகையொன்றை கண்டுபிடித்துள்ளனர்.

சீதுவை பிரதேசத்தில் அமைந்துள்ள கொரியர் சேவை  நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் 09 பொதிகள் சோதனைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தன.

நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து கொழும்பு, மஹரகம மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்காக இந்தப் பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன.

பின்னர் அவை போலி முகவரி என தெரியவந்தது.

சம்பந்தப்பட்ட பொதிகளை திறந்து பார்த்தபோது, ​​2,000 போதை மாத்திரைகள் மற்றும் 04 கிலோ குஷ், 300 கிராம் மெஜிக் காளான்கள் மற்றும் போதைப்பொருள் அடங்கிய சொக்லேட்டுகள் காணப்பட்டன.

இந்த பொருட்களின் பெறுமதி சுமா்ர் 70 மில்லியன் ரூபா என  தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.