போலி இத்தாலி விசா வழங்கி யாழ். இளைஞனிடம் 25 இலட்சம் ரூபாய் மோசடி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை இத்தாலிக்கு அழைப்பதாக கூறி 25 இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரிடம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (11) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை, இத்தாலியில் வசிக்கும் கொக்குவிலை சேர்ந்த நபர் தொடர்பு கொண்டு , இளைஞனை இத்தாலிக்கு அழைப்பதாகவும், அதற்காக 25 இலட்சம் ரூபாய் பணத்தினை தான் சொல்லும் நபரிடம் கையளிக்குமாறு கூறியுள்ளார்.

இளைஞனும், அவரின் பேச்சை நம்பி , அவர் கூறிய நபரிடம் 25 இலட்ச ரூபாய் பணத்தினையும் கையளித்துள்ளார். சில நாட்களில் இத்தாலி விசா என ஒன்றினை , இளைஞனிடம் காசினை பெற்றுக்கொண்ட நபர் கையளித்துள்ளார்.

குறித்த விசாவை இத்தாலி தூதரகத்தில் இளைஞனை பரிசோதித்த போது , அது போலி விசா என அதிகாரிகள் கண்டறிந்து இளைஞனுக்கு கூறியுள்ளனர்.

அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்ட விடயத்தினை இளைஞன் அறிந்து கொண்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதுடன்  சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .