மட்டக்களப்பில் இடிமின்னல் தாக்குதல்!

கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் அக்குரானை ஆஞ்சநேயர் கோயிலுக்கு இன்று (11) வழிபாட்டுக்குச் சென்றவர்கள் இடிமின்னல் தாக்கத்திற்குள்ளாகி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும், அதே இடத்தைச் சேர்ந்த இளைஞனும், மாவடிச்சேனையைச் சேர்ந்த நபர் ஒருவரும் இவ்வாறு பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வழிபாட்டிற்கு சென்றவர்கள் அங்கு கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததன் காரணமாக அருகில் இருந்த மரத்தின் கிழே சென்று அங்கிருந்த உழவு இயந்திரத்தின் மறைவில் இருந்துள்ளனர்.

இதன்போது திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 5 பேரும் அதிர்ச்சிக்குள்ளாகி மயக்கமுற்றனர்.

பின்னர் அவர்கள் வழைச்சேனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்