மட்டு. அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பங்கேற்கும் அரசியல்வாதிகள் ஒழுக்க நெறியை கற்றுவிட்டு கூட்டத்தை நடத்தவும்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் செயற்பாடுகள் உலகம் அறிந்தவை. உலகமே வாய்விட்டு சிரிக்கின்ற, இன்றைய மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றுகின்ற அரசியல்வாதிகள் அனைவரும் அறநெறி வகுப்புக்களில் சிறுவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் ஒழுக்க நடைமுறையை சிறுவர்களுடன் உட்கார்ந்து கற்றுவிட்டு கூட்டத்தை நடத்துங்கள் என்று தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செங்கலடியில் உள்ள தமிழர் உணர்வாளர் அமைப்பின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இலங்கை புவிச்சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் திணைக்களத்துக்கு நாளொன்றுக்கு சுமார் 50 – 75  இலட்சங்கள் வரையில் வருமானம் கிடைத்துவந்தது.

அதன் பின்னர் கடந்த 2 வருடங்களாக திணைக்களத்தினால் ஆற்றுமண் கிரவல் அகழ்வதற்கான அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது.

திணைக்களத்தால் சகல நடவடிக்கையும் நிறுத்தப்பட்ட பின்பும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மணலுக்கோ கிரவலுக்கோ எந்தவிதமான தட்டுப்பாடும் நிலவவில்லை. அதேவேளை இந்த மணல் கிடைக்கவில்லை என அபிவிருத்திப் பணிகள் நிறுத்தப்படவுமில்லை.

இந்நிலையில், திணைக்களத்தின் அனுமதி மறுப்பை தாண்டி, இந்த ஆற்றுமண் கிரவல்களை விநியோகித்தவர் யார்? இது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது?

அப்படியானால், அரசாங்கத்துக்கு கடந்த முறை நாளொன்றுக்கு கிடைத்த 50 – 75 இலட்சம் ரூபாய் வருமானம் யாரிடம் சென்றது?

இதனை ஆராயவேண்டியவர்கள் அமைச்சர்களும் அதிகாரிகளுமே ஆவர். ஏனென்றால், ஒருவர் கூறுகிறார், ஒரு பிடி மண்ணையும் எடுக்க விடமாட்டேன் என்று. இன்னுமொருவர் மாற்றுக்கருத்தை தெரிவிக்கிறார். அவ்வாறாயின், திணைக்களத்தின் தடைகளை தாண்டி இந்த மண்ணை விநியோகித்தவர் யார்? இதை பார்த்தவர் யார்? இந்த கேள்விகளுக்கு உரிய அதிகாரிகள் விடை காண வேண்டும்.

மணலுக்கு செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். சாதாரணமாக 3 கீப் ஒரு ரிப்பர் மண் செங்கலடி பிரதேசத்தில் 32 ஆயிரம் ரூபாயாகும். ஆனால், திட்டமிட்ட வகையில் வேண்டுமென்றே நெருக்கடியை ஏற்படுத்தி குறிப்பிட்ட சிலர் ஆதாயம் பெறுகின்றனர்.

எனவே, மட்டக்களப்பில் வகை தொகையின்றி ஆற்றுமணல் ஏராளமாக திருடப்படுகிறது.  இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த மணல் நெருக்கடியால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஒரு கடுமையான கட்டுப்பாடான ஒழுங்கமைப்பை ஏற்படுத்தி, மாவட்டத்திலிருந்து ஆற்றுமணல் வெளியே செல்லாதளவுக்கு மாவட்ட மக்களின் தேவைக்கு அளவான மண்ணை விநியோகிப்பதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை.

அதேவேளை, வடகிழக்கில் அதிகார பரவலாக்கலை எதிர்பார்க்கிறோம். எனினும், பிரிந்திருக்கும் கிழக்கில் அதிகார பரவலாக்கல் தமிழர்களுக்கு கத்திமுனையாக இருக்கும். ஏனென்றால், ஒரு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டால், அப்போது அதிகார பரவலாக்கல் பெற்றிருந்தால், கிழக்கு மாகாணத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது கத்திமுனைதான்.

காணி, பொலிஸ் அதிகாரம் இருக்கும்போது கிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டு  தமிழர்கள் அல்லாத இடத்தில் அதிகாரம் சென்றால் என்ன நடக்கும் என சிந்தித்துப்  பாருங்கள்.

பிரிந்திருக்கும் கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் அதிகாரம் கிடைக்கப்பெற்று, அங்கு பிள்ளையானோ அல்லது சாணக்கியனோ முதலமைச்சராக இருந்தால் எத்தனை பேர் சிறையில் இருப்பார்கள் என்றும் சிந்தியுங்கள். இது தேவைதானா?

அதிகாரம் உரியவர் கையில்தான் இருக்க வேண்டும். இன்று இரா. சாணக்கியனுக்கு பொலிஸ் அதிகாரம் இருந்தால் பிள்ளையான் சம்பந்தப்பட்டவர்கள் சிறையில் இருப்பார்கள். அவ்வாறு பிள்ளையானுக்கு பொலிஸ் அதிகாரம் கிடைத்தால் கற்பனை செய்து பாருங்கள். சிறையில் இடம் கூட கிடைக்காது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இன்றைய நிலைமை மதில் மேல் பூனை போலுள்ளது.  ஏனென்றால், கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொலிஸ், காணி அதிகாரங்கள் தரமாட்டேன் என்ற டலஸ் அழகப்பெருமவை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரித்தது. அங்கே அவரை ஆதரித்துவிட்டு, இங்கே ஜனாதிபதி ரணிலிடம் காணி, பொலிஸ் அதிகாரத்தை கேட்பது எவ்வாறு என புரியவில்லை.

இந்நிலையில், மாவட்டத்தில் புதிய மதுபானசாலை திறப்பு தொடர்பாக ஒவ்வொரு அரசியல்வாதியும் ‘இதில் எனக்கு சம்மதம் இல்லை. நாங்கள் இதற்கு அனுமதிக்கமாட்டோம்’ என்கிறார்கள். அப்படியென்றால், மதுபானசாலை அமைக்க விண்ணப்பித்தவர்கள் யார்? அவர்கள் இரவு பகலாக குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளின் காரியாலயங்களில் நிரந்தரமாக இருப்பவர்களே. ஆகவே, இவர்கள் யாராவது குறித்த நபர்கள் தமது ஆட்கள் இல்லை என எங்களுடன் வாதிட முனைந்தால் உண்மையை நிரூபிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.