: மத்திய வங்கி பொறுப்பை நிறைவேற்றவில்லையென நீதியமைச்சர் குற்றச்சாட்டு

நாட்டில் நுண்கடன் நிதி திட்டம் புற்றுநோய் போல் பரவியுள்ளது. இதனால் கிராமப்புற மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நுண்கடன் நிதி திட்டத்தில் மத்திய வங்கி தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை என நீதி,சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை இடம்பெற்ற மத்திய வங்கி சட்டமூலம் மீதான விவாதத்தின் போது பிரமிட் கொடுக்கல் வாங்கல் முறைமை,நுண்கடன் நிதி திட்டம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பிரமிட் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.பிரமிட் முறைமை ஆசிய வலயத்துக்குட்பட்ட சிங்கப்பூர் நாட்டில் முதலாவதாக பிரமிட் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற போது 1973 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரமிட் கொடுக்கல் முறைக்கு எதிராக சட்டம்  இயற்றப்பட்டு,அந்த முறைமைக்கு அங்கு தடை விதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பிரமிட் கொடுக்கல் வாங்கல் மலேசியாவுக்கு சென்றது,அங்கும் தடை விதிக்கப்பட்டதன் பின்னர் தற்போது இலங்கையில் இந்த முறைமை ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

பிரமிட் கொடுக்கல் வாங்கல் முறைமை தொடர்பில் மத்திய வங்கி பல முறை அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.ஆனால் அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆகவே பாராளுமன்றத்தின் ஊடாக அந்த முறைமைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்.

அத்துடன் நுண்கடன் நிதி திட்டத்தால் கிராமப்புற மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நுண்கடன் நிதி திட்டம் புற்றுநோய் போல் பரவியுள்ளது.

இதனால் கீழ் மட்ட மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மத்திய வங்கிக்கு உண்டு ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை,இனியும் எடுக்க போவதில்லை.

நுண்கடன் திட்ட நிதியங்கள் தொடர்பில் கண்காணிக்க விசேட நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்க வேண்டும் அதற்கு பிரத்தியேக சட்டம் இயற்றப்பட வேண்டும். ஆகவே எதிர்வரும் காலங்களில் அதற்கான சட்ட மூலம் கொண்டு வரப்படும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு  வழங்க வேண்டும் என்றார்.