மருந்து தட்டுப்பாட்டின் மத்தியிலும் மன்னாரில் சிறப்பாக செயல்படும் சிறுநீரக சிகிச்சை பிரிவு

இலங்கையில் அண்மைக்காலமாக சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக சிறுநீரக தொற்று, சிறுநீரக கற்கள், சிறுநீரக சிதைவு, சிறுநீரக செயலிழப்பு உள்ளடங்களாக சிறு நீரகங்களுடன் தொடர்புடைய அதிகளவான நோய் காரணிகள் அதிகரித்துள்ளதுடன் இதன் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடுகளும் இவ்வாறான மரண அதிகரிப்புக்கு காரணங்களாக அமைகின்றன.

 

மனித உடலில் சிறுநீரகமானது சாதாரண நிலையில் 10 சென்றி மீற்றர் அளவு கொண்டிருக்கும் போது சிறுநீரகமானது தனது தொழிற்பாட்டை சாதாரணமாக மேற்கொள்ளும். இருப்பினும் உணவு பழக்கவழக்கம் அன்றாட நடவடிக்கைகள் நீரிழிவு,உயர் குருதி அமுக்கம் போன்ற நோய் காரணங்களால் சிறுநீரகங்களில் ஏற்படும் பாதிப்பினால் அவ் சிறுநீரகங்கள் சிறிதாவதுடன் அதன் செயற்பாடுகளும் மாற்றங்களுக்கு உள்ளாகின்றது.

குறிப்பாக சிறுநீரக பாதிப்பு ஏற்படும் போது பொதுவாக உடலினால் மேற்கொள்ளப்படும் கழிவகற்றல் செயற்பாடானது முற்றிலும் பாதிக்கப்படுவதுடன் வெளியேற வேண்டிய கழிவுகள் அனைத்தும் உடலில் சேகரிக்கப்பட்டு விடுகின்றது.

இவ்வாறு உடலினும் சேகரிக்கப்படும் கழிவுகள் இரத்தத்திலும் உடலில் உள்ள பாகங்களிலும் நுரையீரல் உட்பட வயிற்று பகுதியில் தேங்கும் போது உடல் வீக்கம், சோர்வு ,மயக்கம்,மூச்சுத்திணறல் உள்ளடங்களாக பல்வேறு நோய் அறிகுறிகள் தோற்றம் பெறுவதுடன் சிலர் கழிவுகள் அதிகம் சேகரிக்கப்படிகின்றமையினால் மரணத்திற்கும் உள்ளாகின்றனர்.

இவ்வாறான நிலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை முழுமையான தீர்வாக காணப்படுகின்ற போதும் பொருத்தமான சிறுநீரகங்கள் கிடைப்பதென்பது அரிதிலும் அரிது. இவ்வாறான நிலையில் சிறுநீரக நோயாளர்களை நோய் நிலையில் இருந்து பாதுகாப்பதற்கான சிறந்த முறை அவர்களின் குருதியில் காணப்படும் கழிவுகளை அகற்றும் குருதி சுத்திகரிப்பு முறையாகும்.

இவ்வாறான சிறந்த குருதி சுத்திகரிப்பு முறையை ஐந்து வருடங்களாக சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைந்துள்ளமன்னார் குருதி சுத்திகரிப்பு சிகிச்சை பிரிவு.

வைத்தியர் சிசில் மற்றும் வைத்தியர் மல்ஷா கீழ் இயங்கும் மன்னார் குருதி சிகிச்சை பிரிவின் கீழ் தற்போது 60 சிறுநீரக நோயாளர்கள் சிறப்பான சிகிச்சையை பெற்று வருகின்றனர் என்பதுடன் சிறுநீரக பிரச்சினைகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக குறைந்துள்ளது.

குறிப்பாக மருந்து தட்டுப்பாடுகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளையும் கடந்து உள்ளூர் மற்றும் வெளியூர் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் விதமாக குறித்த சிகிச்சை பிரிவு ஐந்து வருடங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த 2018 க்கு முன்னர் மன்னார் மாவட்டத்தில் சிறுநீரக சிகிச்சை பிரிவு இன்மையால் பல சிறுநீரக நோயாளிகள் தங்கள் சாதாரண சிகிச்சைக்காக கூட மன்னார் மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம் போன்ற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை காணப்பட்டது.

அதிலும் அவசர நோயாளர்கள் பலர் சிகிச்சை நிலையங்களுக்கு மன்னாரில் இருந்து அனுப்பப்படுவதற்கு முன் பல உபாதைகளுக்கு உள்ளாகியிருந்த கசப்பான அனுபவங்களும் உண்டு.

இதை விட கடந்த 2017 ஆண்டு மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிறுநீரக நோயாளி ஒருவர் இரத்த சுத்தீகரிப்புக்கு சிகிச்சைக்காக  அனுராதபுரம் சென்று திரும்பிய நிலையில் பேரூந்து தரிப்பிடத்தில் இறந்த சம்பவம் மன்னாரில் பதிவாகியிருந்தது.

இவ்வாறான நிலையில் மன்னார் மாவட்டத்தில் சிறுநீரக சிகிச்சை நிலையத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கக் கூடிய விதத்தில் அக்காலப்பகுதியில் வைத்தியசாலையில் காணப்பட்ட வளங்களை கொண்டு கடந்த 2018 ஆம் ஆண்டு சாதாரண இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

தற்போது அப் பிரிவின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் அர்பணிப்பின் காரணமாக 60 நோயாளிகளை பராமரிக்க கூடிய அளவில் சிறந்த சிகிச்சையை வழங்கி வருகிறது மன்னார் சிறுநீரக குருதி மாற்று சிகிச்சை பிரிவு .

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய 140 கிராமங்களை சேர்ந்த மக்களும் பயனடையும் வகையில் இந்த சிகிச்சை பிரிவு தனது சிகிச்சையின் தரத்தை அதிகரித்துள்ளது. அதே நேரம் இவ் சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சிறுநீரக நோய் காரணமாக மரணம் அடைவோர் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

வாரத்தில் ஏழு நாட்களும் இந்த பிரிவு சேவையாற்றுவதுடன் ஒரு சிறுநீரக நோயாளி கட்டாயம் கிழமைக்கு 2 அல்லது 3 முறை இவ் நிலையத்திற்கு வருகை தந்து இரத்த சுத்திகரிப்பில் ஈடுபட வேண்டிய அவசியம் உள்ளது.

சாதாரணமாக ஒரு நோயாளிக்கு இரத்த சுத்தீகரிப்புக்கு நான்கு மணித்தியாலங்கள் தேவைப்படும் நிலையில் மாதத்திற்கு குறைந்தது 500 தடவைகள்  சுத்திகரிப்பு செயற்பாடுகள் இவ் நிலையத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.

இவை தவிர்த்து பாம்பு கடி ,சலரோகம்,சிறுநீர் கிருமி தொற்று போன்ற நோய் காரணமாக வைத்தியசாலை சிகிச்சைக்காக வருகை தரும்  அவசர நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு சேவையையும் இவ் நிலையம் மேற்கொண்டு வருகின்றது.

சாதாரண அடிப்படை வசதிகள் இன்றி ஆரம்பிக்கப்பட்ட இந்த சிகிச்சை பிரிவு ஐந்து வருடங்களில் கிழமை 140 நபர்களுக்கும் நாள் ஒன்றுக்கு 20 நபர்களுக்கு சிகிச்சை வழங்க கூடிய நிலையில் வளர்ச்சியடைந்துள்ளது.

வெறுமனே மன்னார் மாவட்ட சிறுநீரக நோயாளர்கள் மாத்திரமின்றி வெளிமாவட்ட சிறுநீரக நோயாளர்களும் பயன் பெறும் வகையில் அந்த பிரிவின் வைத்தியர்கள்,தாதியர்களின் ஒத்துழைப்பில் இச் சிகிச்சை நிலையம் வளர்சியடைந்துள்ளதுடன் ஒரே நேரத்தில் 8 நபர்கள் குருதி சிகிச்சையை பெறும் அளவுக்கான கொள்ளளவை கொண்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரித்துள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ் சிகிச்சை பிரிவினை முழுமையாக பயன்படுத்துமாறு வைத்தியர் சிசில் கோரிக்கை விடுத்துள்ளார் சிறுநீரக நோயுடன் தொடர்புடைய அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் வைத்தியசாலை வைத்தியர் ஊடாக தங்களது சிறுநீரக குருதி சுத்திகரிப்பு பிரிவின் உடைய சிகிச்சையை பொது மக்கள் பெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருந்து பொருட்களின் விலையேற்றம் வாழ்க்கை செலவுகள் உட்பட அனைத்து அதிகரித்துள்ள நிலையில் மக்களின் செலவை குறித்து அவர்களுக்கு திருப்தியான சேவையை வழங்குவதற்கான மேலதிக வாய்ப்புக்களையும் வளங்களையும்  இவ் சிகிச்சை பிரிவின் வைதியர்கள் தேடி வருகின்றனர் .

சர்வதேச தரம் மிக்க சிகிச்சையையும் ஒரே நேரத்தில் 20 மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய  வாய்ப்புகளை இப்பிரிவினர் உருவாக்க காத்திருக்கின்றனர்.

இவ்வாறான சிகிச்சை பிரிவு மன்னார் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றது சிறப்பே. இவ் சிகிச்சை பிரிவின் வளர்சிக்காக நன் கொடைகளையே அல்லது மருத்துவ உதவிகளையோ சிகிச்சை உபகரணங்களுக்கான உதவிகளை வழங்க கூடியவர்கள் வழங்க முன் வருவது காலத்தின் தேவையாகும்.