மலையக மக்களுக்கு காணி உரிமத்தை வழங்குவது தொடர்பில் விசேட திட்டமிடல்கள்

மலையக மக்களுக்கு எவ்வாறு காணி உரிமைகளை வழங்குவது என்பது குறித்த திட்டமிடல்கள் அமைச்சர்களாக ரமேஷ் பத்திரண, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்தோடு மலையக மக்களை மீண்டும் இலங்கையர்கள் என்ற அங்கீகாரத்துக்குள் உள்ளடக்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்கிழமை  (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து இவ்வாண்டுடன் 200 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன.

இலங்கையில் இலவச கல்வி , சுகாதாரம் என்பவற்றை அந்த மக்களே ஏற்படுத்திக் கொடுத்தனர். நாட்டைக்கட்டியெழுப்புவதில் அம்மக்களின் பங்களிப்பு அளப்பரியது. அதன் பின்னரே சுற்றுலாத்துறை உள்ளிட்டவை முன்னேற்றமடைந்தன.

அவ்வாறிருக்கையில் மலையக மக்களுக்கு அவற்றுக்கு ஈடான நன்மைகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை. கொள்கை ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

எனவே தான் மலையக மக்களை இலங்கையர்கள் என்ற அங்கீகாரத்துக்குள் ஒன்றிணைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

சமூர்த்தி , அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் மலையக மக்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 52 சதவீதமான மக்கள் அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அது மாத்திரமின்றி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பள விவகாரத்தில் நாள் கூலி முறைமைகள் மாற்றப்பட வேண்டும். காணிகளை பகிர்ந்தளித்தால் மாத்திரமே அவர்களால் முன்னேற்றமடைய முடியும்.

இது தொடர்பில் அமைச்சரவையிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர்களாக ரமேஷ் பத்திரண, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார என்போருடன் இணைந்து மலையக மக்களுக்கு எவ்வாறு காணி உரிமைகளை வழங்குவது என்பது குறித்த திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் உள்ளிட்ட மனிதாபிமானமற்ற , அரசியல் ரீதியான தீர்மானங்களால் மலையக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றனர். அன்று இந்நாட்டில் மலையக மக்களே இரண்டாவது பெரும்பான்மையினராகக் காணப்பட்டனர். ஆனால் அந்தக் காலப்பகுதியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களால் மலைய மக்கள் நான்காவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவே மலையக மக்களை இலங்கையர்கள் என்ற சமுதாயத்துக்குள் இணைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம்.

இதற்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்குவார் என நம்புகின்றோம். இதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் 22 உறுப்பினர்கள் அங்கத்துவம் பெறுகின்றனர். எதிர்வரும் நவம்பரில் மலையகம் 200 தேசிய நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் பிரதான நிகழ்வையும் , ஏனைய 13 மாவட்டங்களில் கிளை நிகழ்வுகளையும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு பிரதிநிதிகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதோடு , தேசிய நிகழ்வில் பலர் பங்குபற்றவும் எதிர்பார்த்துள்ளனர் என்றார்.