மலையக மக்கள் விடயத்தில் அனைவரும் ஓரணியாக ஒன்றிணைய வேண்டும்!

இரண்டு நூற்றாண்டுகளாக  மலையக மக்களுக்கே உரித்தான பிரச்சினைகளுக்கும் மற்றும் தற்போதைய நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கும் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினருமே பொறுப்பு கூறவேண்டும்.

எதிர்காலத்திலேயேனும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினரும் ஓரணியாக ஒன்றிணைய வேண்டுமென தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக  மலையக மக்களுக்கே உரித்தான பிரச்சினைகளுக்கும், தற்போதைய நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு ஆட்சியிலிருந்த அரசாங்கங்களும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினருமே பொறுப்பு கூறவேண்டும்.

குறிப்பாக 20 வருட காலமாக நான் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் 2015 ஆம் ஆண்டே அதிகாரம் கிடைத்தது.

எனினும் ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் மக்களிடத்தில் மாற்றமொன்றை ஏற்படுத்தினேன். நான் பொறுப்பில் இருந்த போது எமது மக்களுக்கு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தேன்.

தற்செயலாக ஆட்சி மாற்றம் காரணமாக தொடர்ச்சியாக என்னால் எதனையும் செய்ய முடியாமல் போனது.

எதிர்வரும் காலங்களிலேயேனும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்.

எமது மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள், அடிப்படை பிரச்சினைகள், சம்பளப்பிரச்சினைகளுக்கான தீர்வு பெற்றுக் கொடுப்பது மற்றும் அவர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றி பொருளாதார ரீதியாக  மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதைய ஜனாதிபதியிடமோ அல்லது எதிர் காலத்தில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியிடத்திலேயோ கூட்டாக வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் ஒரு வருடத்துக்கு முன்னதாக காணப்பட்ட பல பிரச்சினைகளுக்கு ஓரளவு ஜனாதிபதியினால் தீர்வு காணப்பட்டுள்ளது.

இருப்பினும் அனைத்து பிரச்சினைகளும் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அரசாங்கம் தொடர்பில் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் நிச்சயம் இந்த அரசாங்கம் தோல்வியடையும்.

தேர்தல் ஒன்று இடம்பெறவேண்டும். பிரதிநிதிகள் மக்கள் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும். தற்போதைய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளுக்கு செல்கிறோம்.

அங்கு எமது பிரச்சினைகளை கூறுவோம். தீர்வு பெற்றுத் தருமாறு வலியுறுத்துவோம். இருப்பினும் இவை எந்த அளவு சாத்தியப்படும் என்பது எனக்கு தெரியாது.

எனினும் சஜித் பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்தின் எமது மக்களுக்கு மாற்றத்தை கொண்டு வரலாம் என நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.