முல்லைத்தீவில் மதுபானசாலைக்கு மக்கள் எதிர்ப்பு

முல்லைத்தீவு, உணாப்பிலவு பகுதியில் அமைக்கப்பட்ட மதுபானசாலைக்கு பொதுமக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டம் உணாப்பிலவு பகுதியில் புதிதாக சில்லறை மதுபானசாலை நிலையமொன்று இம்மாதம் 15ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராம மக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அத்தோடு, அவர்கள் மதுபானசாலையை அகற்றுமாறு கோரி பிரதேச செயலாளருக்கு கடிதம் ஒன்றினை கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை வழங்கியுள்ளார்கள்.

இந்நிலையில், கடிதம் வழங்கியும் இதுவரை மதுபானசாலையை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், மதுபானசாலை அமைக்கும் இடத்துக்கு 100 மீற்றர் தூரத்துக்குட்பட்ட பகுதியில் பாடசாலைகள், மத ஸ்தலங்கள் இருக்கக்கூடாது என்பது விதிமுறையாக உள்ளதன் அடிப்படையில், இது குறித்து தங்களிடம் அபிப்பிராயம் கேட்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கிராமத்தில் பாடசாலை அமைந்திருப்பதனால், பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாவது, பாடசாலையிலிருந்து இடைவிலகுவது போன்ற நிலைமைகள் உருவாகும் என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.