மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு 2 நோயாளர் காவு வண்டிகளை ஜப்பான் தூதுவராலயம் வழங்கிவைப்பு

ஜப்பான் அரசின் நிதி அனுசரணையுடன் ஜப்பான் தூதுவராலயத்தினால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இவ்வண்டிகளை பரிசளிக்கும் நிகழ்வு இன்று (10) காலை 9.30 மணிக்கு மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொசி மற்றும் அவரது தூதரக அதிகாரிகள் இணைந்து இந்த நோயாளர் காவு வண்டிகளை வழங்கினர்.

இதன்போது மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையினரால் யாழ் இசைக்கருவி நினைவுச்சின்னமாக வழங்கப்பட்டு தூதுவர் கௌரவிக்கப்பட்டார்.

அதனையடுத்து, மூளாய் வைத்தியசாலையின் அனைத்து வசதி வாய்ப்புக்கள் குறித்தும் தூதுவர் ஆராய்ந்த நிலையில், தனது வருகையின் ஞாபகமாக ஒரு மரக்கன்றை வைத்தியசாலை வளாகத்தில் நட்டு வைத்தார்.

இந்த நிகழ்வில் ஜப்பான் தூதுவர் மிசுகொசி, தூதுவராலய அதிகாரிகள், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையினர், பணியாளர்கள், சங்கானை பிரதேச செயலர், வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உதவி கூட்டுறவு ஆணையாளர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.